Monday, March 14, 2016

குங்குமம் 21.03.2016 இதழில் வெளியான எனது கதை

இன்றைய குங்குமம் 21.03.2016 இதழில் வெளியான எனது இருபக்க கதை




Monday, November 9, 2015

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்


திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை.



உண்மையை சொல்லப்போனால், இப்படியெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை. திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளும் காதலர்கள், பெரும்பாலும் ஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள். விரல் நுனியில் வந்துவிட்ட தகவல்கள், எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ, இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் நன்றாகவே பயன்படுகிறது.
இந்த பின்னணியில் இந்தப் படத்தை 100% கற்பனை கதை என்று சொல்லலாம். ஏனெனில், பேய் பிசாசு என்பதுவும் நிரூபிக்கப்படவில்லை.

வெளிப்படையாக நடப்பதில்லை என்றாலும் பையனும் பெண்ணும் அவரவர் வீட்டுக்குள் இருந்தபடி, லிவிங் டுகெதராக(!?) இருப்பது இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது தான்.

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமணத்தில் நுழையும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை பெருத்த ஏமாற்றத்தை தருகையில், இது போன்ற திருமணத்துக்கு முன்னான‌ உறவுகள் தரும் நினைவுகளே அவர்களை அந்த ஏமாற்றத்தை கடந்து போகும் தைரியத்தை தருகிறது என்று சொல்லலாம். ஆனால், இந்த வாதம், திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சில கேள்விகள்.

1. திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்து வெற்றிகரமாக பிள்ளை வரை போகாமல் , சேர்ந்து வாழ முடிந்த ஆண்கள், திருமணத்துக்கு பிறகு மனைவி என்கிற பெண்ணை ஏன் இம்ப்ரஸ் செய்ய முடிவதில்லை, ஏன் பெண்ணாக நடத்த முடிவதில்லை?

2. திருமண வாழ்வில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகளை 100% பரிபூரணமாக திருப்தி செய்யும் ஆண்களை கணவனாக பெற்ற பெண்களில் பலர், திருமணத்துக்கு முன்னான இவ்வகையான முறையற்ற உறவுகள் தரும் அனுபவங்களால், ஒரு குற்ற உணர்வுடனேதான் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். இந்த அனுபவங்களால், அவர்களின் மனதுக்கு நிறைவான கணவன் அமைந்தும், அவர்களால் அந்த மண வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இந்த குற்ற உணர்வு தடுத்தபடியே தான் இருக்கிறது. இது தேவையா?

3. திருமணம் என்று வருகையில் கணவன் நன்றாக படித்தவனாக, லட்ச ரூபாய் சம்பாதிப்பவனாக , அமேரிக்க மாப்பிள்ளையாக பார்க்கும் பெண்கள், மணமாகி வந்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்பதுதான். ஆனால், மேற்சொன்ன, திருமணத்துக்கு முன்னான உறவுகளில், அப்போதைக்கு தனது சம்பாத்தியத்தில் பாதியையோ, முழுமையையோ சேர்ந்து வாழும் காதலனுக்காக செலவு செய்துவிடும் இந்த பெண்கள், கல்யாணம் ஆனதும் கணவனிடம் ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்று கேட்பது நியாயமாகப் படவில்லை.

4. திருமணத்துக்கு முன்னான இது போன்ற உறவுகளால், கருத்தடை மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் கர்ப்பப்பை பாதிக்கப்படுகிறது என்பது மருத்துவ உண்மை. கர்ப்பப்பை பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கு, திருமணத்துக்கு பிறகு கணவனுடனான உறவில் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் வருகிறது. இந்த பின்னணியில், திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தற்காலிக பொறுப்பற்ற ஆண்களுடனான‌ உறவுகளுக்காய் உடலை கெடுத்துக்கொண்டுவிட்டு, திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை ஏற்கும் கணவர்களின் காசில் மருத்துவமனைகளில் குழந்தைபேற்றிற்காய் காத்திருப்பது என்ன நியாயம்?

திரைப்படத்தில் இந்த கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.

நவீனத்துவ உலகிற்கான படம் என்று சொல்ல வருகிறார்களோ என்னமோ? நவீனத்துவத்திற்கும், சமூக கடமை மற்றும் பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

“திருமணம் செய்துகொள்வதாகத்தான் இருந்தார்கள். இடையில் இப்படி ஆகிவிட்டது” என்கிற சால்ஜாப்பை வெகுகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் காதல் செய்வீர், பீட்ஸா என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.
துணைக்கென காத்திருப்பது ஒரு சுகம்.

ஆனால், காத்திருப்பதும், நவீனத்துவ வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதும், அவரவர் விருப்பம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

என் வரையில் துணைக்கென காத்திருப்பதில் நிறைய புத்திசாலித்தனங்களும், செளகர்யங்களும், அர்த்தங்களும், ஒரு முறைப்படுதலும் இருக்கிறது என்று தான் சொல்வேன். அது பிற்போக்குத்தனமாக தெரியலாம். அந்த புத்திசாலித்தனங்களுக்காகவும், செளகர்யங்களுக்காகவும், அர்த்தங்களுக்காகவும், ஒரு முறைப்படுதலுக்காகவும் காத்திருப்பது என் அளவில் ஒரு சரியான வழியாகவே தெரிகிறது.

– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

Monday, October 12, 2015

தி மார்ஷிய‌ன் - திரைப்படம் விமர்சனம்

தி மார்ஷிய‌ன்  - திரைப்படம் விமர்சனம்


ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.

மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் அவேயில் தனியான தீவில் மாட்டிக்கொள்ளும் டாம் ஹாங்க்ஸ் போல, ஆராய்ச்சிக்கென ஒரு குழுவாக வந்துவிட்டு, திடீரென வரும் சூராவளியால் மார்ஸ் கிரகத்தில் தனித்து மாட்டிக்கொள்கிறார் மார்க் வாட்னி.



காப்பாற்றப்படும் வரை அந்த கிரகத்தில் பிழைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது, நாஸாவுடன் எப்படி தொடர்பு கொள்கிறார் என்பதையெல்லாம் ஒரு சினிமாக்காரராக இல்லாமல், ஒரு கதாசிரியராகவே, மயிலாப்பூர் கோயிலுக்கு அருகே கிடைத்த வீடு போல உண்மை நிலவரத்துக்கு மிக மிக பக்கமாக எழுதியிருக்கிறார் ஆன்டி வெயர்.

எலக்ட்ரோலிஸிஸ் முறையால் தண்ணீர் தயாரிப்பது, மனித மலத்தை உரமாக பயன்படுத்தி கொண்டு கிழங்கு செய்வது என்பன போன்ற ஐடியாக்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது மார்க் பூமியுடன் தொடர்பு கொள்ள செய்யும் ஐடியா. அந்த ஒரு ஐடியா தான் ஒரு சாதாரண கதாசிரியரான ஆன்டியின் கதையை உலகத்தரமான அறிவியல் புனைவுக் கதையாக மாற்றுகிறது. சினிமாக்காரர்களுக்கே இந்த ஐடியா தோன்றியிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். 7 மாதங்களுக்குப் பிறகு காய்ந்து போன கருவாடு போல் வரும் மார்க் வாட்னியை பார்த்தால் நமக்கும் அதிர்ச்சியாகிறது.

திரைப்படத்தின் க்ளைமாக்ஸில், மார்க்கை விண்வெளி ஓடத்திலிருந்து கயிறு கட்டி மீட்கும் ட்ரிக் நிறைய சையின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வந்துவிட்டது. ஆனால் மார்ஷியன் திரைப்படத்தில் ஒரு வித்தியாசம். எடையை குறைப்பதற்காக, கண்ணாடி ஜன்னல்கள், ராக்கேட்டின் மூக்கு என எல்லாவற்றையும் கழற்றி வீசிவிடுகிறார் மார்க். மார்ஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் அழுத்தம் மிக மிக குறைவு. இருப்பினும், வேகமாக எழும்பும் ராக்கேட்டின் மேல் அபரிமிதமான வெப்பத்தை தரவல்லது தான்.

மார்ஸ் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிந்ததும் மார்ஸுக்கு செல்ல, ஹீட் ஷீல்டு செய்யவென நாசா ADEPT என்னும் பெயரில் தனியாக ஒரு ப்ராஜெக்டையே துவக்கியிருக்கிறது. அப்படியிருக்கையில் எப்படி இப்படி காட்சி அமைத்தார்கள் என்று தெரியவில்லை.

மார்ஸ் கிரகத்தில் வெப்பம் - 62 இருக்குமாம். அதே போல, சூறாவளியெல்லாம் வீசாதாம். லேசாக எதிர்வீட்டு புவனா கடந்து போகையில் தவழும் மல்லிகை மணம் போல இருந்தாலே அதிகம் என்கிறார்கள்.

எப்படியோ ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் பார்த்த அனுபவம் நிச்சயம். மார்ஸ் கிரகத்தை விண்வெளியிலிருந்து காட்டும் காட்சிகள் தூள். ராஜகாளியம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கண்கள் போல செக்கச்செவேலனெ இருக்கிறது. சிகப்பு கிரகம் என்று சொல்வது பொறுத்தம் என்றே தோன்றுகிறது.

என் நண்பர் இந்த படத்தை அமேரிக்காவின் ரீகல் தியேட்டரில் பார்த்திருக்கிறார். 3டி யில் பார்த்தாராம். 300 - 400 இருக்கும் மொத்த இருக்கைகளில் அவர் ஒரு ஐம்பது பேர்களுடன் பார்த்திருக்கிறார். பெரும்பாலான இருக்கைகள் காலி. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குவதாக கேள்வி.

எப்படி என்பது விளங்கவில்லை. இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் முந்தைய படமான எக்ஸோடஸும் 3டி தான். அதில் விட்ட பெயரை இதில் எடுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள். திரைப்படத்தில் நெளிய வைக்கும் ஒரு லவ் சீன் கூட இல்லை. காதல் மசாலாக்கள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக படம் பார்க்க முடிகிறது.

ஆனால் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக அதிலும் அதையெல்லாம் 3டியில் பார்ப்பதற்காக நிச்சயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் மார்ஷியன்.


 - இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

#நன்றி
கீற்று(http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/29352-2015-10-12-06-20-37 )

Monday, October 5, 2015

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்


இலக்கியா தேன்மொழி



நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல.



மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான் இந்த பிரிவில் அடைக்க விரும்புகிறேன்.
2. புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள். துணைக்கென காத்திருக்காதவர்களுக்கு இந்த பிரிவு.


நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்கிற டயலாக்கும்,
‘என்னை மாதிரி பொண்ணையெல்லாம் எங்கடா விட்டு வைக்கிறீங்க’ என்கிற டயலாக்கும் அச்சுஅசலாக புரிந்துகொள்ள கடனமான உறவுகளை பழகுபவர்கள் என்று குறிப்புணர்த்துகின்றன.


நவீனத்துக்கு பிறகான ஒருவர் , ‘துணைக்கென‌ எதற்கு காத்திருக்க வேண்டும்? குடும்பம் என்கிற அமைப்பு, பெண்ணடிமைத்தனம், கற்பு என்கிற கற்பிதம் போன்ற‌ எல்லாம் காத்திருப்பவர்களால் தான் எழுகிறது. இது பிற்போக்குத்தனமானது’ என்பதாக வாதம் செய்யலாம்.

உடல் மற்றும் உணர்ச்சி வடிகால்களுக்கு பலியாகி விடுபவர்கள் உருவாக்கும் சமூக உறவுகள் புரிந்து கொள்ள எளிமையாக இருப்பதில்லை.

மனிதர்களுள் இந்த இரண்டு விதமான பிரிவினைகள் இருப்பதன் பிரஞையே இல்லாத ஒரு இளைஞன், நிஜ வாழ்க்கையில் அனுபவம் வாயிலாக இப்படிப்பட்ட உறவுகளை கடக்க நேர்ந்தால் என்னாகிறான் எனபது தான் கதை என்று சொல்லலாம்.

படத்தை பெரும்பாலான பெண்கள் ஏற்கவில்லை எனவும், திரையரங்கில் வைத்து படத்தின் இயக்குனரை பிடிபிடி என்று பிடித்துவிட்டார்கள் எனவும் நான் கேள்விப்பட்டதில் எத்தனை உண்மை என்று தெரியவில்லை. ஆனால், புரிந்து கொள்ள கடினமான உறவுமுறைகளை உருவாக்கும் அல்லது இருக்கும் இளைஞர் – இளைஞி பட்டாளத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பது குறித்து உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள் திரைப்படத்தில்.


புரிந்துகொள்ள மிக மிக எளிமையான உறவுகளை உருவாக்கும் / பழகும் மனிதர்கள், இந்த படத்தை ‘தங்களுக்கானது இல்லை’ என்று கடந்து போய்விடுவது உத்தமம்.
ஆனால், நீங்கள் சுதந்திரம், நம்பிக்கை, உண்மை போன்ற வார்த்தைகளுக்கு, புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் சொல்லும் விளக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அது உங்களுக்கு பயன்படலாம்.

புரிதலின் அடிப்படையில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற அடிப்படையே தெரியாதவர்களையும் புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் என்று தான் கொள்ள வேண்டியிருக்கும்.  ஏனெனில் டெக்னாலஜி விரல் நுனியில் வந்துவிட்ட பிறகும் ‘எனக்கு தெரியாது.. யாருமே சொல்லவில்லை’ என்றெல்லாம் டயலாக் பேசுவது, கடமையை தட்டிக்கழிப்பது போன்றதாகும்.

நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்று டயலாக் பேசி பலனில்லை.

ஜிவி ப்ரகாஷ் நடிப்பில் முன்னேறியிருக்கிறார். டயலாக் இன்றி கண்களால் பேசும் காட்சிகளில் நடிப்பு தெரிகிறது. மனீஷா யாதவ், ஆனந்தி இருவருமே அழகு.

நல்ல கதை. ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பதை தெளிவாக சொல்லாமல் போனதால், மக்களிடையே சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. போகட்டும். படம் நன்றாக ஓடுகிறதாம்.


– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

Tuesday, September 29, 2015

தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்


தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்




பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து விடுகிறது.

நேர்மையான வழிகளில் பணம் ஈட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. அபி நயாவின் காதலனாக வரும் அரவிந்த் சிங் பொருள் ஈட்ட தேர்வு செய்யும் வழி, ஓட்டு ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய் என்கிற நேர்மையற்ற நிழல் உலக வர்த்தகத்தை.
முதல் சில காட்சிகளில், அருள் தாஸ் விக்ராந்தின் தாயை பலவந்தப்படுத்தி கர்ப்பமாக்கும் காட்சி, “ஆணின் ஆணாதிக்கத்தால் தான் பெண் களங்கப்படுகிறாள் , ஆகையால் பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று குறிப்புணர்த்துகிறது, பிற்பாடு அரவிந்த் சிங்  அபிநயாவின் வீட்டிற்கு வந்து இரட்டை அர்த்தத்தில் பேசும் வசனக்காட்சி முதல் காட்சியுடன் முரண்படுகிறது. நம் எண்ணப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டி வருகிறது.

ஆண் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவே குடும்பம் என்னும் அமைப்பை நிறுவுகிறான்.     பெண்ணாக வரும் அபிநயா அரவிந்த் சிங்கை தேர்வு செய்யும் வரையில், எல்லா பெண்களையும் போல் நேர்மையான , உழைப்பின் வழி உயர்வில் நம்பிக்கை கொண்டவளாக தோன்றிவிட்டு, ஓட்டு ஒன்றை ஐந்நூறு ரூபாய்க்கு விற்கும் அரவிந்த் சிங்கை தேர்வு செய்வதின் மூலம், தவறான ஆணின் பக்கம்  சேர்வதால், “கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண்ணுக்கான ஒரே தீர்வு அல்ல” என்று தோன்ற வைக்கிறார்.

இன்னொரு விதமாக பார்க்கின், அபி நயாவை கடத்தி விற்க முனைகிறான் அபி நயாவின் தாயின் தம்பி. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமை செய்வது யாரெனில் அவளுக்கு நன்கு பரிச்சயமான, உறவினன் என்றாகிறது. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமையை நிகழ்த்தும் ஆணை, “என்ன செய்கிறான், எவ்வாறு பொருள் ஈட்டுகிறான், அவனது தர்க்க நியாயங்கள் என்னென்ன?” என்கிற எந்த கேள்வியையும் எழுப்பாமல், தங்களுக்கிடையில் அங்கீகரிப்பதன் மூலம், அபி நயாவின் தாய் என்கிற இன்னொரு பெண் தான் அபி நயா கடத்தப்படுவதற்கு காரணமாகிறாள் என்று சொன்னால் அது மிகையில்லை.

நிர்பயா கேஸில் குற்றம்சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ராம்சிங்கிற்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். காரைக்கால் வினோதினி, டிசிஎஸ் வைஸ்யா, பூனேவின் நயனா பூஜாரி. இவர்களையெல்லாம் மரணத்தை நோக்கி தள்ளிய ஆண்கள் அனைவருக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் தொலைக்காட்சி இயக்குனர் தனது கணவரை விவாகரத்து செய்கிறார். பின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த , ஒரு மகனை பெற்ற ஒருவரை மறுமணம் செய்கிறார். அவரிடம் தனது சொந்த மகளை தங்கை என்று அறிமுகம் செய்கிறார். இரண்டாவது கணவரின் மகன் தனது புதிய சித்தியின் தங்கையை காதலிக்கிறார். இதை அறிந்த இயக்குனர், தனது டிரைவரை வைத்து பெற்ற மகளை கொலை செய்கிறார். இது ஏதோ உலகின் வேறொரு மூலையில் நடந்த விவகாரம் அல்ல. ஷீனா போரா கொலை வழக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நிஜ உலகின் பிரச்சனையும் அதுதான். நாடு முழுவதும் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண் விடுதலைக்கு ஒரே தீர்வாக முன் மொழியப்படுகிறது. அது பெண் விடுதலைக்கான‌ ஆரோக்கியமான, அறிவுப்பூர்வமான‌ ஒரே ஒரு தீர்வு அல்ல‌.இதனால் ஒரு சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

1. ஒரு பக்கம் பெண் சுதந்திரத்திற்கென உரத்து முழங்கிவிட்டு, இன்னொரு பக்கம் தவறான ஆண்களை தேர்வு செய்வதன் மூலமாக கட்டற்ற சுதந்திரம், ஒரு முறையான தீர்வல்ல என்கிற முரண்பாட்டையும் ஒரு சேர இச்சமூகத்தின் வழி நாம் காணமுடியும். ஆக ஒரு தீர்வை முன்மொழிகையிலேயே, அதிலுள்ள முரணையும் நாம் ஒரு சேர காண்கிறோம். இதனால், பெண் அடிமைத்தளையையும், பெண் சுதந்திரத்தையும் தெளிவாக வரையறுக்க முடியாத நிலை உருவாகிறது.
2. என்றாலும் இந்திய குடும்ப நலச்சட்டங்கள் இந்த முரண்களை கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பதும், அனேகம் இடங்களில் பெண்கள் பக்கமாகவே சாய்ந்திருப்பதும் கண்கூடாகத்தெரிகிறது. இதனால் குழப்பங்களே மிஞ்சுகின்றன. வாசகர்களுக்கு 498ஏ மிஸ்யூஸ் குறித்து ஓரளவுக்கு புரிதல் இருக்குமென்று நம்புகிறேன். இல்லாதவர்கள் ‘498A misuse’ என்று இணையத்தில் தேடிப்பார்க்கவும்.

3. தோல்வியடையும் தீர்வுகள் நாளடைவில் மதிப்பிழக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக முதல் கட்ட தீர்வுகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முரண்கள் களையப்படவேண்டும்.
சாலையில் நீங்கள் தினம் தினம் பார்க்கலாம். மணலை ஏற்றிக்கொண்டு செல்லும் மாட்டு வண்டியை. அதை ஓட்டிச்செல்பவன் ஈட்டும் பணம் யாருடைய உழைப்பு? அவனுடையதா? மாட்டுடையதா?

அடிதடி, அராஜகத்தை வேலைவாய்ப்பாக கொள்ளும் சமூகத்தை கட்டுக்குள் கொண்டுவர அடிதடி, அராஜகம் பயன்படாது என்பதை மகாபாரதத்தை இதிகாசமாக கொண்ட நாட்டுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு தீர்வாக பாவம் – புண்ணியம், சுவர்க்கம் – நரகம்  போன்ற இருமைகளை உருவாக்கிசெயல்படுத்தியது இக்காலத்திற்கு உதவாது.

இதற்கான தீர்வுகள் குறித்து இந்தப் படம் எதையும் முன்வைக்கவில்லை.

முரண்பட்ட கதாபாத்திரங்கள் கதையை பலமிழக்கச் செய்கின்றன. விக்ராந்திற்கு காதலி இருக்கிறாள்.ஆனால் டூயட் இல்லை. மாறாக அர்விந்த் சிங் – அபிநயாவுக்கு ஒரு பாடல். படத்தின் நாயகன் யார் என்கிற கேள்வி எழுகிறது.


– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)


நன்றி
திண்ணை இதழ்(http://puthu.thinnai.com/?p=30414)

Monday, March 16, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6




கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து.   வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது.

சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர்.

கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள்.

'ஹலோ'

'ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க?' என்றாள் கிரிஜா.

'நோ நோ அவசரப்படக்கூடாது.. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாரு' என்று வினய்யிடமிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.

'என்ன? பாக்க என்ன இருக்கு? ரோடு தான் இருக்கு? நீ எங்க?'

'ஏம்மா.. கோழி முட்டை சைஸுக்கு கண்ணை வச்சிக்கிட்டு உனக்கு ரோடு மட்டும் தான் தெரிஞ்சதா... ரோட்டுமேல ஒரு ஸ்விஃப்ட் நிக்கிதே அது தெரியவே இல்லையா?'

கிரிஜா மீண்டும் பார்த்தாள். ஒரு மினி லாரிக்கு பின்புறம் மெரூன் நிறத்தில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் நின்றுகொண்டிருந்தது.

கொஞ்சம் கண்ணை சுருக்கி பார்த்ததில் உள்ளே அமர்ந்திருந்தவன் சாயலில் வினய் போலவே இருந்ததாகப்பட்டது கிரிஜாவுக்கு.

'உனக்காக காரோட பின் சீட் கதவை திறந்து வச்சிருக்கேன்.. வா' என்றான் வினய் போனில்.

'ஆங்.. ஏன் முன் சீட்டுன்னா ஆகாதா?'

'அய்யோ.. அழகான பொண்ணுங்க எல்லாம் பின் சீட்டுல தாம்மா உக்காரணும்' என்றான் வினய்.

'ம்ஹும்.. நான் வர மாட்டேன்... நீ கூப்பிடுறத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கு' என்றாள் கிரிஜா.

'பின்ன... வில்லங்கத்தை விலை கொடுத்து இல்ல வாங்கி வச்சிருக்கேன்.. முழுசா ஆறரை லட்சம் இந்த காரு தெரியுமா?'

'அதுக்கு?'

'அட.. வாம்மா... நேரம் ஆக ஆக, மழை வந்திடும்.. பாவம் நீ.. வெள்ளை கலர்ல சுடிதார் போட்டுட்டு வேற வந்திருக்க.. நீ மட்டும் மழையில நனைஞ்சா,  இந்த ஏரியாவே சூடாயிடும்... ஆம்பளைங்க வயித்தெறிச்சலை வாங்கி கொட்டிக்காத...'

'சுடிதார்ன்னதும் நியாபகம் வருது.. உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்.. என்கிட்ட அழகழகா டிரஸ் இருக்கு.. போயும் போயும் இத போட்டுட்டு வர சொன்ன பாரு? இதெல்லாம் நல்ல நாள்லயே நான் போடமாட்டேன்'

'மேடம், நான் உன் டேஸ்டுக்கு ஜீன்ஸ்ல இறக்குமதி ஆயிருக்கேன்ல. ஏதாவது சொன்னேனா?.. அதே மாதிரி நீயும் எதுவும் சொல்ல கூடாது.. நீ இந்த சுடிதார்ல தான் தேவதை மாதிரி இருக்க தெரியுமா.. ஐயய்யோ'

'என்னடா?'

'ஏற்கனவே மேகம் வந்தாச்சு.. மழை சீக்கிரம் வந்துடும். வாம்மா'

கிரிஜா அண்ணாந்து பார்த்துவிட்டு,

'டேய்.. காருக்குள்ள உக்காந்துகிட்டு மேகம் வரதுலாம் எப்படிடா கவனிக்கிற' என்றாள்.

'அதான் உன் முதுகுல திரண்டு கிடக்கே................ மேகம்... ' என்றான் வினய்.

'அடச்சே.. ரொம்பத்தான் உனக்கு' என்ற கிரிஜா, தொடர்ந்து,

'ஆனா, மழை வர அளவுக்கு இல்லைடா மேகம்' என்றாள் அண்ணாந்து பார்த்தபடியே.

'செல்லம்.. நீ காருக்குள்ள வந்துட்டா, மேகமா இருந்த உன் கூந்தல் கார் மேகம் ஆயிடும்மா,.. மழை கன்ஃபர்ம்ட்' என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே , தடதடவென மழை பொழியத்துவங்க, கிரிஜா சட்டென  காரை நோக்கி ஓடினாள்.

வினய் எக்கி காரின் பின் சீட் கதவை திறக்க, ஓடி வந்து அவசரமாக ஏறிக்கொண்டு கதவை சார்த்திக்கொண்டாள்.

அதற்குள் முகம் , கைகளிலெல்லாம் திட்டுதிட்டாய் மழைத்துளிகள், அவளின் வெண்மை நிறத்தை பளபளக்கச்செய்தன.

'பக்கி பக்கி... ஃப்ர்ஸ்ட் மீட்டுக்கு நேரம் பாக்குது பாரு' என்றாள் கிரிஜா. மழை இப்போது தடதடவென பொழிய, காருக்குள் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்த ஏசி குளிர் மயிர்க்கூச்செறிய வைத்தது. மெல்லிய இசை காற்றில் இழைந்தோடிக்கொண்டிருந்தது.

வினய் சன்னமாக உறுமிக்கொண்டிருந்த காரின் கியரை உயர்த்தி, சாலையில் செலுத்தினான்.

'டேய், என்னை எங்கடா கூட்டிட்டு போற?' என்றாள் கிரிஜா.

'உன்னை ஒண்ணும் கடத்திட்டு போகலை.. ஒரு சின்ன டிரைவ் அவ்ளோ தான்' என்று சொல்லிக்கொண்டே காரை சாலையில் செலுத்தினான் வினய். கார் ஐயப்பன் கோயிலைத்தாண்டி சிக்னலில் இடது புறம் திரும்பி, காம்ப்ளக்ஸ் தான், மீண்டும் இடது புறம் திரும்பி, பார்க்கின் பின்பக்க வாயிலைக் கடந்து, மீண்டும் இடது புறம் திரும்பு சற்றே உள்வாங்கி சாலையோரம் நின்றது.

மழை இப்போது ச்சோவென கொட்டத்துவங்கியிருந்தது. தடதடவென அதன் சத்தம், காருக்குள்ளும் கேட்டது. கிரிஜா கண்ணாடி ஜன்னலினூடே பார்த்தாள். கண்ணாடி மீது மழை நீர் மீண்டும் மீண்டும் ஒழுகி புதிது புதிதாய் சித்திரங்களை அழித்து அழித்து வரைந்துகொண்டிருந்தது.

வினய், காரின் டிரைவர் சீட்டை பின்பக்கமாக சாய்த்து, அப்படியே பின் சீட்டுக்கு தாவினான். கிரிஜா அதிர்ந்து பின் சுதாரித்து அவனுக்கு இடம் விட்டாள்.

வினய் பின் சீட்டில் அமர்ந்தபின், குனிந்து சீட்டின் வலது பக்கம் இருந்த லிவரை திருக, சீட், மீண்டும் எழுந்து நின்றுகொள்ள, முன்னிருக்கை இரண்டும் ரோட்டிலிருந்து பின் பக்க சீட்டை மறைத்தன. கிரிஜா சுதாரிப்பதற்குள் அவளது கழுத்தில் கைவைத்து இறுக்கி, அவளது இதழை தன்னிதழால் கவ்வினான் வினய்.

சட்டென நேர்ந்த அபகரிப்பில் அதிர்ந்து பின் சுதாரித்த கிரிஜா, அவனுடைய இதழ்களுக்கு தன் இதழ்களை தெரிந்தே பறிகொடுத்தாள்.



இரண்டு வழுவழுப்பான சதைகள் ஒன்றையொன்று விழுங்க முயற்சிக்கத்துவங்கின. இதழ்களுக்கிடையிலான‌ அந்த போர், மெல்ல மெல்ல உக்கிரம் அடைந்தது. கிரிஜா கிறங்கிச்சாய்ந்தாள். வினய்யின் கை கிரிஜா கழுத்திலிருந்து சரிந்து, மார்பில் விழுந்தது.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.  கிரிஜா முன்பு ரசித்த மழை நீர் ஓவியம் இப்போது அவர்களது உஷ்ணத்தில் பனி படர்ந்துவிட்டிருந்தது.

அந்த குறுகிய இடம் அவர்களுக்கென ஒதுங்கியது. ஒதுங்கிய இடத்தில் அவர்களின் வெப்ப உடல்கள் நிறைந்தன. மென்மேலும் இறுகின. விட்டுவிட்டு தளர்ந்தன. ஒன்றின் தளர்ச்சியை மற்றொன்று சமன்செய்தது. சில சமயங்களின் இரண்டுமே உக்கிரமாக மோதிக்கொண்டன.

கிரிஜாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. அவள் வினய்யை தள்ளிவிட்டாள்.

'போதும்...ப்ளீஸ்' என்றாள் ஆடைகளை சரிசெய்துகொண்டே.

வினய் ஒரு நொடி கிரிஜாவின் அங்கங்களை பார்த்தான். மீண்டும் அவள் மீது பாய்ந்தான். கிரிஜா மீண்டும் தள்ளிவிட்டாள்.

'போதும்ன்னு சொல்றேன்ல... ப்ளீஸ் வினய்.. லீவ் மீ' என்றாள்.

வினய் சாய்ந்து அமர்ந்தான். தலை முடியை கோதிக்கொண்டான்.

'கிரி, நீ செம ஃபிகர்டீ' என்றான்.

கிரிஜா மார்பில் கைவைத்து சுடிதாரை நோண்டிவிட்டு,

'டேய் பட்டனை பாழ்பண்ணிட்டியேடா' என்றவள், தொடர்ந்து,

'இதுக்கு தான் இந்த சுடிதாரை போட்டுட்டு வர சொன்னியா.... கேடிப்பயலே' என்றாள்.



 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com

Sunday, March 8, 2015

மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி

இன்மையில் வெளியான எனது கவிதை....


மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி



சிகப்பு நிறத்தில் மின்னிய அதனை
பறித்துக் கடித்தேன்...
சுவைத்தேன்...
ஆதாம் பார்த்தான்..
அவனிடம் அது இல்லை..
அவனால் பார்க்க மட்டுமே முடியும்
என்பதை நான் உணரவில்லை...
அவன் பார்த்தது என்னுடையதை என‌ நினைத்து
எனது குறியினை மறைத்தேன்...
மறைத்த நொடியில் தான்
அவனுக்கும் புரிந்திருக்கவேண்டும்..
மானுடம் எனது
தவறிலிருந்து அன்று துவங்கியது...


- இலக்கியா தேன்மொழி
#நன்றி
இன்மை(http://www.inmmai.com/p/blog-page.html)