Monday, November 9, 2015

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்


திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை.



உண்மையை சொல்லப்போனால், இப்படியெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை. திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளும் காதலர்கள், பெரும்பாலும் ஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள். விரல் நுனியில் வந்துவிட்ட தகவல்கள், எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ, இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் நன்றாகவே பயன்படுகிறது.
இந்த பின்னணியில் இந்தப் படத்தை 100% கற்பனை கதை என்று சொல்லலாம். ஏனெனில், பேய் பிசாசு என்பதுவும் நிரூபிக்கப்படவில்லை.

வெளிப்படையாக நடப்பதில்லை என்றாலும் பையனும் பெண்ணும் அவரவர் வீட்டுக்குள் இருந்தபடி, லிவிங் டுகெதராக(!?) இருப்பது இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது தான்.

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமணத்தில் நுழையும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை பெருத்த ஏமாற்றத்தை தருகையில், இது போன்ற திருமணத்துக்கு முன்னான‌ உறவுகள் தரும் நினைவுகளே அவர்களை அந்த ஏமாற்றத்தை கடந்து போகும் தைரியத்தை தருகிறது என்று சொல்லலாம். ஆனால், இந்த வாதம், திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சில கேள்விகள்.

1. திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்து வெற்றிகரமாக பிள்ளை வரை போகாமல் , சேர்ந்து வாழ முடிந்த ஆண்கள், திருமணத்துக்கு பிறகு மனைவி என்கிற பெண்ணை ஏன் இம்ப்ரஸ் செய்ய முடிவதில்லை, ஏன் பெண்ணாக நடத்த முடிவதில்லை?

2. திருமண வாழ்வில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகளை 100% பரிபூரணமாக திருப்தி செய்யும் ஆண்களை கணவனாக பெற்ற பெண்களில் பலர், திருமணத்துக்கு முன்னான இவ்வகையான முறையற்ற உறவுகள் தரும் அனுபவங்களால், ஒரு குற்ற உணர்வுடனேதான் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். இந்த அனுபவங்களால், அவர்களின் மனதுக்கு நிறைவான கணவன் அமைந்தும், அவர்களால் அந்த மண வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இந்த குற்ற உணர்வு தடுத்தபடியே தான் இருக்கிறது. இது தேவையா?

3. திருமணம் என்று வருகையில் கணவன் நன்றாக படித்தவனாக, லட்ச ரூபாய் சம்பாதிப்பவனாக , அமேரிக்க மாப்பிள்ளையாக பார்க்கும் பெண்கள், மணமாகி வந்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்பதுதான். ஆனால், மேற்சொன்ன, திருமணத்துக்கு முன்னான உறவுகளில், அப்போதைக்கு தனது சம்பாத்தியத்தில் பாதியையோ, முழுமையையோ சேர்ந்து வாழும் காதலனுக்காக செலவு செய்துவிடும் இந்த பெண்கள், கல்யாணம் ஆனதும் கணவனிடம் ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்று கேட்பது நியாயமாகப் படவில்லை.

4. திருமணத்துக்கு முன்னான இது போன்ற உறவுகளால், கருத்தடை மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் கர்ப்பப்பை பாதிக்கப்படுகிறது என்பது மருத்துவ உண்மை. கர்ப்பப்பை பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கு, திருமணத்துக்கு பிறகு கணவனுடனான உறவில் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் வருகிறது. இந்த பின்னணியில், திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தற்காலிக பொறுப்பற்ற ஆண்களுடனான‌ உறவுகளுக்காய் உடலை கெடுத்துக்கொண்டுவிட்டு, திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை ஏற்கும் கணவர்களின் காசில் மருத்துவமனைகளில் குழந்தைபேற்றிற்காய் காத்திருப்பது என்ன நியாயம்?

திரைப்படத்தில் இந்த கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.

நவீனத்துவ உலகிற்கான படம் என்று சொல்ல வருகிறார்களோ என்னமோ? நவீனத்துவத்திற்கும், சமூக கடமை மற்றும் பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

“திருமணம் செய்துகொள்வதாகத்தான் இருந்தார்கள். இடையில் இப்படி ஆகிவிட்டது” என்கிற சால்ஜாப்பை வெகுகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் காதல் செய்வீர், பீட்ஸா என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.
துணைக்கென காத்திருப்பது ஒரு சுகம்.

ஆனால், காத்திருப்பதும், நவீனத்துவ வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதும், அவரவர் விருப்பம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

என் வரையில் துணைக்கென காத்திருப்பதில் நிறைய புத்திசாலித்தனங்களும், செளகர்யங்களும், அர்த்தங்களும், ஒரு முறைப்படுதலும் இருக்கிறது என்று தான் சொல்வேன். அது பிற்போக்குத்தனமாக தெரியலாம். அந்த புத்திசாலித்தனங்களுக்காகவும், செளகர்யங்களுக்காகவும், அர்த்தங்களுக்காகவும், ஒரு முறைப்படுதலுக்காகவும் காத்திருப்பது என் அளவில் ஒரு சரியான வழியாகவே தெரிகிறது.

– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

Monday, October 12, 2015

தி மார்ஷிய‌ன் - திரைப்படம் விமர்சனம்

தி மார்ஷிய‌ன்  - திரைப்படம் விமர்சனம்


ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.

மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் அவேயில் தனியான தீவில் மாட்டிக்கொள்ளும் டாம் ஹாங்க்ஸ் போல, ஆராய்ச்சிக்கென ஒரு குழுவாக வந்துவிட்டு, திடீரென வரும் சூராவளியால் மார்ஸ் கிரகத்தில் தனித்து மாட்டிக்கொள்கிறார் மார்க் வாட்னி.



காப்பாற்றப்படும் வரை அந்த கிரகத்தில் பிழைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது, நாஸாவுடன் எப்படி தொடர்பு கொள்கிறார் என்பதையெல்லாம் ஒரு சினிமாக்காரராக இல்லாமல், ஒரு கதாசிரியராகவே, மயிலாப்பூர் கோயிலுக்கு அருகே கிடைத்த வீடு போல உண்மை நிலவரத்துக்கு மிக மிக பக்கமாக எழுதியிருக்கிறார் ஆன்டி வெயர்.

எலக்ட்ரோலிஸிஸ் முறையால் தண்ணீர் தயாரிப்பது, மனித மலத்தை உரமாக பயன்படுத்தி கொண்டு கிழங்கு செய்வது என்பன போன்ற ஐடியாக்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது மார்க் பூமியுடன் தொடர்பு கொள்ள செய்யும் ஐடியா. அந்த ஒரு ஐடியா தான் ஒரு சாதாரண கதாசிரியரான ஆன்டியின் கதையை உலகத்தரமான அறிவியல் புனைவுக் கதையாக மாற்றுகிறது. சினிமாக்காரர்களுக்கே இந்த ஐடியா தோன்றியிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். 7 மாதங்களுக்குப் பிறகு காய்ந்து போன கருவாடு போல் வரும் மார்க் வாட்னியை பார்த்தால் நமக்கும் அதிர்ச்சியாகிறது.

திரைப்படத்தின் க்ளைமாக்ஸில், மார்க்கை விண்வெளி ஓடத்திலிருந்து கயிறு கட்டி மீட்கும் ட்ரிக் நிறைய சையின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வந்துவிட்டது. ஆனால் மார்ஷியன் திரைப்படத்தில் ஒரு வித்தியாசம். எடையை குறைப்பதற்காக, கண்ணாடி ஜன்னல்கள், ராக்கேட்டின் மூக்கு என எல்லாவற்றையும் கழற்றி வீசிவிடுகிறார் மார்க். மார்ஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் அழுத்தம் மிக மிக குறைவு. இருப்பினும், வேகமாக எழும்பும் ராக்கேட்டின் மேல் அபரிமிதமான வெப்பத்தை தரவல்லது தான்.

மார்ஸ் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிந்ததும் மார்ஸுக்கு செல்ல, ஹீட் ஷீல்டு செய்யவென நாசா ADEPT என்னும் பெயரில் தனியாக ஒரு ப்ராஜெக்டையே துவக்கியிருக்கிறது. அப்படியிருக்கையில் எப்படி இப்படி காட்சி அமைத்தார்கள் என்று தெரியவில்லை.

மார்ஸ் கிரகத்தில் வெப்பம் - 62 இருக்குமாம். அதே போல, சூறாவளியெல்லாம் வீசாதாம். லேசாக எதிர்வீட்டு புவனா கடந்து போகையில் தவழும் மல்லிகை மணம் போல இருந்தாலே அதிகம் என்கிறார்கள்.

எப்படியோ ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் பார்த்த அனுபவம் நிச்சயம். மார்ஸ் கிரகத்தை விண்வெளியிலிருந்து காட்டும் காட்சிகள் தூள். ராஜகாளியம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கண்கள் போல செக்கச்செவேலனெ இருக்கிறது. சிகப்பு கிரகம் என்று சொல்வது பொறுத்தம் என்றே தோன்றுகிறது.

என் நண்பர் இந்த படத்தை அமேரிக்காவின் ரீகல் தியேட்டரில் பார்த்திருக்கிறார். 3டி யில் பார்த்தாராம். 300 - 400 இருக்கும் மொத்த இருக்கைகளில் அவர் ஒரு ஐம்பது பேர்களுடன் பார்த்திருக்கிறார். பெரும்பாலான இருக்கைகள் காலி. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குவதாக கேள்வி.

எப்படி என்பது விளங்கவில்லை. இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் முந்தைய படமான எக்ஸோடஸும் 3டி தான். அதில் விட்ட பெயரை இதில் எடுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள். திரைப்படத்தில் நெளிய வைக்கும் ஒரு லவ் சீன் கூட இல்லை. காதல் மசாலாக்கள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக படம் பார்க்க முடிகிறது.

ஆனால் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக அதிலும் அதையெல்லாம் 3டியில் பார்ப்பதற்காக நிச்சயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் மார்ஷியன்.


 - இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

#நன்றி
கீற்று(http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/29352-2015-10-12-06-20-37 )

Monday, October 5, 2015

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்


இலக்கியா தேன்மொழி



நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல.



மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான் இந்த பிரிவில் அடைக்க விரும்புகிறேன்.
2. புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள். துணைக்கென காத்திருக்காதவர்களுக்கு இந்த பிரிவு.


நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்கிற டயலாக்கும்,
‘என்னை மாதிரி பொண்ணையெல்லாம் எங்கடா விட்டு வைக்கிறீங்க’ என்கிற டயலாக்கும் அச்சுஅசலாக புரிந்துகொள்ள கடனமான உறவுகளை பழகுபவர்கள் என்று குறிப்புணர்த்துகின்றன.


நவீனத்துக்கு பிறகான ஒருவர் , ‘துணைக்கென‌ எதற்கு காத்திருக்க வேண்டும்? குடும்பம் என்கிற அமைப்பு, பெண்ணடிமைத்தனம், கற்பு என்கிற கற்பிதம் போன்ற‌ எல்லாம் காத்திருப்பவர்களால் தான் எழுகிறது. இது பிற்போக்குத்தனமானது’ என்பதாக வாதம் செய்யலாம்.

உடல் மற்றும் உணர்ச்சி வடிகால்களுக்கு பலியாகி விடுபவர்கள் உருவாக்கும் சமூக உறவுகள் புரிந்து கொள்ள எளிமையாக இருப்பதில்லை.

மனிதர்களுள் இந்த இரண்டு விதமான பிரிவினைகள் இருப்பதன் பிரஞையே இல்லாத ஒரு இளைஞன், நிஜ வாழ்க்கையில் அனுபவம் வாயிலாக இப்படிப்பட்ட உறவுகளை கடக்க நேர்ந்தால் என்னாகிறான் எனபது தான் கதை என்று சொல்லலாம்.

படத்தை பெரும்பாலான பெண்கள் ஏற்கவில்லை எனவும், திரையரங்கில் வைத்து படத்தின் இயக்குனரை பிடிபிடி என்று பிடித்துவிட்டார்கள் எனவும் நான் கேள்விப்பட்டதில் எத்தனை உண்மை என்று தெரியவில்லை. ஆனால், புரிந்து கொள்ள கடினமான உறவுமுறைகளை உருவாக்கும் அல்லது இருக்கும் இளைஞர் – இளைஞி பட்டாளத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பது குறித்து உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள் திரைப்படத்தில்.


புரிந்துகொள்ள மிக மிக எளிமையான உறவுகளை உருவாக்கும் / பழகும் மனிதர்கள், இந்த படத்தை ‘தங்களுக்கானது இல்லை’ என்று கடந்து போய்விடுவது உத்தமம்.
ஆனால், நீங்கள் சுதந்திரம், நம்பிக்கை, உண்மை போன்ற வார்த்தைகளுக்கு, புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் சொல்லும் விளக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அது உங்களுக்கு பயன்படலாம்.

புரிதலின் அடிப்படையில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற அடிப்படையே தெரியாதவர்களையும் புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் என்று தான் கொள்ள வேண்டியிருக்கும்.  ஏனெனில் டெக்னாலஜி விரல் நுனியில் வந்துவிட்ட பிறகும் ‘எனக்கு தெரியாது.. யாருமே சொல்லவில்லை’ என்றெல்லாம் டயலாக் பேசுவது, கடமையை தட்டிக்கழிப்பது போன்றதாகும்.

நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்று டயலாக் பேசி பலனில்லை.

ஜிவி ப்ரகாஷ் நடிப்பில் முன்னேறியிருக்கிறார். டயலாக் இன்றி கண்களால் பேசும் காட்சிகளில் நடிப்பு தெரிகிறது. மனீஷா யாதவ், ஆனந்தி இருவருமே அழகு.

நல்ல கதை. ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பதை தெளிவாக சொல்லாமல் போனதால், மக்களிடையே சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. போகட்டும். படம் நன்றாக ஓடுகிறதாம்.


– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

Tuesday, September 29, 2015

தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்


தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்




பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து விடுகிறது.

நேர்மையான வழிகளில் பணம் ஈட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. அபி நயாவின் காதலனாக வரும் அரவிந்த் சிங் பொருள் ஈட்ட தேர்வு செய்யும் வழி, ஓட்டு ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய் என்கிற நேர்மையற்ற நிழல் உலக வர்த்தகத்தை.
முதல் சில காட்சிகளில், அருள் தாஸ் விக்ராந்தின் தாயை பலவந்தப்படுத்தி கர்ப்பமாக்கும் காட்சி, “ஆணின் ஆணாதிக்கத்தால் தான் பெண் களங்கப்படுகிறாள் , ஆகையால் பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று குறிப்புணர்த்துகிறது, பிற்பாடு அரவிந்த் சிங்  அபிநயாவின் வீட்டிற்கு வந்து இரட்டை அர்த்தத்தில் பேசும் வசனக்காட்சி முதல் காட்சியுடன் முரண்படுகிறது. நம் எண்ணப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டி வருகிறது.

ஆண் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவே குடும்பம் என்னும் அமைப்பை நிறுவுகிறான்.     பெண்ணாக வரும் அபிநயா அரவிந்த் சிங்கை தேர்வு செய்யும் வரையில், எல்லா பெண்களையும் போல் நேர்மையான , உழைப்பின் வழி உயர்வில் நம்பிக்கை கொண்டவளாக தோன்றிவிட்டு, ஓட்டு ஒன்றை ஐந்நூறு ரூபாய்க்கு விற்கும் அரவிந்த் சிங்கை தேர்வு செய்வதின் மூலம், தவறான ஆணின் பக்கம்  சேர்வதால், “கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண்ணுக்கான ஒரே தீர்வு அல்ல” என்று தோன்ற வைக்கிறார்.

இன்னொரு விதமாக பார்க்கின், அபி நயாவை கடத்தி விற்க முனைகிறான் அபி நயாவின் தாயின் தம்பி. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமை செய்வது யாரெனில் அவளுக்கு நன்கு பரிச்சயமான, உறவினன் என்றாகிறது. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமையை நிகழ்த்தும் ஆணை, “என்ன செய்கிறான், எவ்வாறு பொருள் ஈட்டுகிறான், அவனது தர்க்க நியாயங்கள் என்னென்ன?” என்கிற எந்த கேள்வியையும் எழுப்பாமல், தங்களுக்கிடையில் அங்கீகரிப்பதன் மூலம், அபி நயாவின் தாய் என்கிற இன்னொரு பெண் தான் அபி நயா கடத்தப்படுவதற்கு காரணமாகிறாள் என்று சொன்னால் அது மிகையில்லை.

நிர்பயா கேஸில் குற்றம்சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ராம்சிங்கிற்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். காரைக்கால் வினோதினி, டிசிஎஸ் வைஸ்யா, பூனேவின் நயனா பூஜாரி. இவர்களையெல்லாம் மரணத்தை நோக்கி தள்ளிய ஆண்கள் அனைவருக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் தொலைக்காட்சி இயக்குனர் தனது கணவரை விவாகரத்து செய்கிறார். பின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த , ஒரு மகனை பெற்ற ஒருவரை மறுமணம் செய்கிறார். அவரிடம் தனது சொந்த மகளை தங்கை என்று அறிமுகம் செய்கிறார். இரண்டாவது கணவரின் மகன் தனது புதிய சித்தியின் தங்கையை காதலிக்கிறார். இதை அறிந்த இயக்குனர், தனது டிரைவரை வைத்து பெற்ற மகளை கொலை செய்கிறார். இது ஏதோ உலகின் வேறொரு மூலையில் நடந்த விவகாரம் அல்ல. ஷீனா போரா கொலை வழக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நிஜ உலகின் பிரச்சனையும் அதுதான். நாடு முழுவதும் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண் விடுதலைக்கு ஒரே தீர்வாக முன் மொழியப்படுகிறது. அது பெண் விடுதலைக்கான‌ ஆரோக்கியமான, அறிவுப்பூர்வமான‌ ஒரே ஒரு தீர்வு அல்ல‌.இதனால் ஒரு சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

1. ஒரு பக்கம் பெண் சுதந்திரத்திற்கென உரத்து முழங்கிவிட்டு, இன்னொரு பக்கம் தவறான ஆண்களை தேர்வு செய்வதன் மூலமாக கட்டற்ற சுதந்திரம், ஒரு முறையான தீர்வல்ல என்கிற முரண்பாட்டையும் ஒரு சேர இச்சமூகத்தின் வழி நாம் காணமுடியும். ஆக ஒரு தீர்வை முன்மொழிகையிலேயே, அதிலுள்ள முரணையும் நாம் ஒரு சேர காண்கிறோம். இதனால், பெண் அடிமைத்தளையையும், பெண் சுதந்திரத்தையும் தெளிவாக வரையறுக்க முடியாத நிலை உருவாகிறது.
2. என்றாலும் இந்திய குடும்ப நலச்சட்டங்கள் இந்த முரண்களை கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பதும், அனேகம் இடங்களில் பெண்கள் பக்கமாகவே சாய்ந்திருப்பதும் கண்கூடாகத்தெரிகிறது. இதனால் குழப்பங்களே மிஞ்சுகின்றன. வாசகர்களுக்கு 498ஏ மிஸ்யூஸ் குறித்து ஓரளவுக்கு புரிதல் இருக்குமென்று நம்புகிறேன். இல்லாதவர்கள் ‘498A misuse’ என்று இணையத்தில் தேடிப்பார்க்கவும்.

3. தோல்வியடையும் தீர்வுகள் நாளடைவில் மதிப்பிழக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக முதல் கட்ட தீர்வுகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முரண்கள் களையப்படவேண்டும்.
சாலையில் நீங்கள் தினம் தினம் பார்க்கலாம். மணலை ஏற்றிக்கொண்டு செல்லும் மாட்டு வண்டியை. அதை ஓட்டிச்செல்பவன் ஈட்டும் பணம் யாருடைய உழைப்பு? அவனுடையதா? மாட்டுடையதா?

அடிதடி, அராஜகத்தை வேலைவாய்ப்பாக கொள்ளும் சமூகத்தை கட்டுக்குள் கொண்டுவர அடிதடி, அராஜகம் பயன்படாது என்பதை மகாபாரதத்தை இதிகாசமாக கொண்ட நாட்டுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு தீர்வாக பாவம் – புண்ணியம், சுவர்க்கம் – நரகம்  போன்ற இருமைகளை உருவாக்கிசெயல்படுத்தியது இக்காலத்திற்கு உதவாது.

இதற்கான தீர்வுகள் குறித்து இந்தப் படம் எதையும் முன்வைக்கவில்லை.

முரண்பட்ட கதாபாத்திரங்கள் கதையை பலமிழக்கச் செய்கின்றன. விக்ராந்திற்கு காதலி இருக்கிறாள்.ஆனால் டூயட் இல்லை. மாறாக அர்விந்த் சிங் – அபிநயாவுக்கு ஒரு பாடல். படத்தின் நாயகன் யார் என்கிற கேள்வி எழுகிறது.


– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)


நன்றி
திண்ணை இதழ்(http://puthu.thinnai.com/?p=30414)

Monday, March 16, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6




கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து.   வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது.

சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர்.

கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள்.

'ஹலோ'

'ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க?' என்றாள் கிரிஜா.

'நோ நோ அவசரப்படக்கூடாது.. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாரு' என்று வினய்யிடமிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.

'என்ன? பாக்க என்ன இருக்கு? ரோடு தான் இருக்கு? நீ எங்க?'

'ஏம்மா.. கோழி முட்டை சைஸுக்கு கண்ணை வச்சிக்கிட்டு உனக்கு ரோடு மட்டும் தான் தெரிஞ்சதா... ரோட்டுமேல ஒரு ஸ்விஃப்ட் நிக்கிதே அது தெரியவே இல்லையா?'

கிரிஜா மீண்டும் பார்த்தாள். ஒரு மினி லாரிக்கு பின்புறம் மெரூன் நிறத்தில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் நின்றுகொண்டிருந்தது.

கொஞ்சம் கண்ணை சுருக்கி பார்த்ததில் உள்ளே அமர்ந்திருந்தவன் சாயலில் வினய் போலவே இருந்ததாகப்பட்டது கிரிஜாவுக்கு.

'உனக்காக காரோட பின் சீட் கதவை திறந்து வச்சிருக்கேன்.. வா' என்றான் வினய் போனில்.

'ஆங்.. ஏன் முன் சீட்டுன்னா ஆகாதா?'

'அய்யோ.. அழகான பொண்ணுங்க எல்லாம் பின் சீட்டுல தாம்மா உக்காரணும்' என்றான் வினய்.

'ம்ஹும்.. நான் வர மாட்டேன்... நீ கூப்பிடுறத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கு' என்றாள் கிரிஜா.

'பின்ன... வில்லங்கத்தை விலை கொடுத்து இல்ல வாங்கி வச்சிருக்கேன்.. முழுசா ஆறரை லட்சம் இந்த காரு தெரியுமா?'

'அதுக்கு?'

'அட.. வாம்மா... நேரம் ஆக ஆக, மழை வந்திடும்.. பாவம் நீ.. வெள்ளை கலர்ல சுடிதார் போட்டுட்டு வேற வந்திருக்க.. நீ மட்டும் மழையில நனைஞ்சா,  இந்த ஏரியாவே சூடாயிடும்... ஆம்பளைங்க வயித்தெறிச்சலை வாங்கி கொட்டிக்காத...'

'சுடிதார்ன்னதும் நியாபகம் வருது.. உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்.. என்கிட்ட அழகழகா டிரஸ் இருக்கு.. போயும் போயும் இத போட்டுட்டு வர சொன்ன பாரு? இதெல்லாம் நல்ல நாள்லயே நான் போடமாட்டேன்'

'மேடம், நான் உன் டேஸ்டுக்கு ஜீன்ஸ்ல இறக்குமதி ஆயிருக்கேன்ல. ஏதாவது சொன்னேனா?.. அதே மாதிரி நீயும் எதுவும் சொல்ல கூடாது.. நீ இந்த சுடிதார்ல தான் தேவதை மாதிரி இருக்க தெரியுமா.. ஐயய்யோ'

'என்னடா?'

'ஏற்கனவே மேகம் வந்தாச்சு.. மழை சீக்கிரம் வந்துடும். வாம்மா'

கிரிஜா அண்ணாந்து பார்த்துவிட்டு,

'டேய்.. காருக்குள்ள உக்காந்துகிட்டு மேகம் வரதுலாம் எப்படிடா கவனிக்கிற' என்றாள்.

'அதான் உன் முதுகுல திரண்டு கிடக்கே................ மேகம்... ' என்றான் வினய்.

'அடச்சே.. ரொம்பத்தான் உனக்கு' என்ற கிரிஜா, தொடர்ந்து,

'ஆனா, மழை வர அளவுக்கு இல்லைடா மேகம்' என்றாள் அண்ணாந்து பார்த்தபடியே.

'செல்லம்.. நீ காருக்குள்ள வந்துட்டா, மேகமா இருந்த உன் கூந்தல் கார் மேகம் ஆயிடும்மா,.. மழை கன்ஃபர்ம்ட்' என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே , தடதடவென மழை பொழியத்துவங்க, கிரிஜா சட்டென  காரை நோக்கி ஓடினாள்.

வினய் எக்கி காரின் பின் சீட் கதவை திறக்க, ஓடி வந்து அவசரமாக ஏறிக்கொண்டு கதவை சார்த்திக்கொண்டாள்.

அதற்குள் முகம் , கைகளிலெல்லாம் திட்டுதிட்டாய் மழைத்துளிகள், அவளின் வெண்மை நிறத்தை பளபளக்கச்செய்தன.

'பக்கி பக்கி... ஃப்ர்ஸ்ட் மீட்டுக்கு நேரம் பாக்குது பாரு' என்றாள் கிரிஜா. மழை இப்போது தடதடவென பொழிய, காருக்குள் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்த ஏசி குளிர் மயிர்க்கூச்செறிய வைத்தது. மெல்லிய இசை காற்றில் இழைந்தோடிக்கொண்டிருந்தது.

வினய் சன்னமாக உறுமிக்கொண்டிருந்த காரின் கியரை உயர்த்தி, சாலையில் செலுத்தினான்.

'டேய், என்னை எங்கடா கூட்டிட்டு போற?' என்றாள் கிரிஜா.

'உன்னை ஒண்ணும் கடத்திட்டு போகலை.. ஒரு சின்ன டிரைவ் அவ்ளோ தான்' என்று சொல்லிக்கொண்டே காரை சாலையில் செலுத்தினான் வினய். கார் ஐயப்பன் கோயிலைத்தாண்டி சிக்னலில் இடது புறம் திரும்பி, காம்ப்ளக்ஸ் தான், மீண்டும் இடது புறம் திரும்பி, பார்க்கின் பின்பக்க வாயிலைக் கடந்து, மீண்டும் இடது புறம் திரும்பு சற்றே உள்வாங்கி சாலையோரம் நின்றது.

மழை இப்போது ச்சோவென கொட்டத்துவங்கியிருந்தது. தடதடவென அதன் சத்தம், காருக்குள்ளும் கேட்டது. கிரிஜா கண்ணாடி ஜன்னலினூடே பார்த்தாள். கண்ணாடி மீது மழை நீர் மீண்டும் மீண்டும் ஒழுகி புதிது புதிதாய் சித்திரங்களை அழித்து அழித்து வரைந்துகொண்டிருந்தது.

வினய், காரின் டிரைவர் சீட்டை பின்பக்கமாக சாய்த்து, அப்படியே பின் சீட்டுக்கு தாவினான். கிரிஜா அதிர்ந்து பின் சுதாரித்து அவனுக்கு இடம் விட்டாள்.

வினய் பின் சீட்டில் அமர்ந்தபின், குனிந்து சீட்டின் வலது பக்கம் இருந்த லிவரை திருக, சீட், மீண்டும் எழுந்து நின்றுகொள்ள, முன்னிருக்கை இரண்டும் ரோட்டிலிருந்து பின் பக்க சீட்டை மறைத்தன. கிரிஜா சுதாரிப்பதற்குள் அவளது கழுத்தில் கைவைத்து இறுக்கி, அவளது இதழை தன்னிதழால் கவ்வினான் வினய்.

சட்டென நேர்ந்த அபகரிப்பில் அதிர்ந்து பின் சுதாரித்த கிரிஜா, அவனுடைய இதழ்களுக்கு தன் இதழ்களை தெரிந்தே பறிகொடுத்தாள்.



இரண்டு வழுவழுப்பான சதைகள் ஒன்றையொன்று விழுங்க முயற்சிக்கத்துவங்கின. இதழ்களுக்கிடையிலான‌ அந்த போர், மெல்ல மெல்ல உக்கிரம் அடைந்தது. கிரிஜா கிறங்கிச்சாய்ந்தாள். வினய்யின் கை கிரிஜா கழுத்திலிருந்து சரிந்து, மார்பில் விழுந்தது.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.  கிரிஜா முன்பு ரசித்த மழை நீர் ஓவியம் இப்போது அவர்களது உஷ்ணத்தில் பனி படர்ந்துவிட்டிருந்தது.

அந்த குறுகிய இடம் அவர்களுக்கென ஒதுங்கியது. ஒதுங்கிய இடத்தில் அவர்களின் வெப்ப உடல்கள் நிறைந்தன. மென்மேலும் இறுகின. விட்டுவிட்டு தளர்ந்தன. ஒன்றின் தளர்ச்சியை மற்றொன்று சமன்செய்தது. சில சமயங்களின் இரண்டுமே உக்கிரமாக மோதிக்கொண்டன.

கிரிஜாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. அவள் வினய்யை தள்ளிவிட்டாள்.

'போதும்...ப்ளீஸ்' என்றாள் ஆடைகளை சரிசெய்துகொண்டே.

வினய் ஒரு நொடி கிரிஜாவின் அங்கங்களை பார்த்தான். மீண்டும் அவள் மீது பாய்ந்தான். கிரிஜா மீண்டும் தள்ளிவிட்டாள்.

'போதும்ன்னு சொல்றேன்ல... ப்ளீஸ் வினய்.. லீவ் மீ' என்றாள்.

வினய் சாய்ந்து அமர்ந்தான். தலை முடியை கோதிக்கொண்டான்.

'கிரி, நீ செம ஃபிகர்டீ' என்றான்.

கிரிஜா மார்பில் கைவைத்து சுடிதாரை நோண்டிவிட்டு,

'டேய் பட்டனை பாழ்பண்ணிட்டியேடா' என்றவள், தொடர்ந்து,

'இதுக்கு தான் இந்த சுடிதாரை போட்டுட்டு வர சொன்னியா.... கேடிப்பயலே' என்றாள்.



 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com

Sunday, March 8, 2015

மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி

இன்மையில் வெளியான எனது கவிதை....


மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி



சிகப்பு நிறத்தில் மின்னிய அதனை
பறித்துக் கடித்தேன்...
சுவைத்தேன்...
ஆதாம் பார்த்தான்..
அவனிடம் அது இல்லை..
அவனால் பார்க்க மட்டுமே முடியும்
என்பதை நான் உணரவில்லை...
அவன் பார்த்தது என்னுடையதை என‌ நினைத்து
எனது குறியினை மறைத்தேன்...
மறைத்த நொடியில் தான்
அவனுக்கும் புரிந்திருக்கவேண்டும்..
மானுடம் எனது
தவறிலிருந்து அன்று துவங்கியது...


- இலக்கியா தேன்மொழி
#நன்றி
இன்மை(http://www.inmmai.com/p/blog-page.html)

Sunday, March 1, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 4

உதிராதபூக்கள் - அத்தியாயம் 4



சூளைமேடு ரோடை கடந்து செல்கையில், பாண்தலூனில் இறங்கி ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அழகழகான உள்ளாடைகள் வாங்கினாள் கிரிஜா. பிங்க் , சிகப்பு , சந்தன நிறங்களில் அழகழகாய் இதயங்கள் பொறிக்கப்பட்ட பாண்டிக்களும், ப்ராக்களும் அவளுக்கு எப்போதுமே பிடித்தம். முதல் நாள் சந்திப்பிற்கு வினய்யை ஜீன்ஸ் டிசர்ட் அணிந்து வர சொல்லவேண்டும் என்று தோன்றியது. தான் கேட்கப்போவதாலேயே அவன் மறுக்கக்கூடாது. அதற்கு பொறுத்தமாக, லெவி ஸ்ட்ராஸில் ஸ்ட்ரெட்ச்சபிள் ஜீன்ஸ் வாங்கினாள். இரண்டொரு தொல தொல டிசட்டைகளை மார்பில் வைத்து கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஒரு இளக்கார உதட்டுச்சுழிப்புடன்,  பரந்த மார்புகளை கவ்விப்பிடிகும் சற்றே இறுக்கமான ஸ்லீவ்லெஸ் டிசர்டுகளை அவள் தேர்ந்தெடுப்பதை,கவனித்துவிட்டு, லேசான உதட்டோர புன்னகையுடன் தீர்மானமாய் கிரிஜாவைப் பார்த்தாள் கடை பணிப்பெண்

விதம் விதமான ஆடைகளை பரிந்துரைக்கும் நோக்கில், அவளருகே நின்று, அவளின் உடல் வனப்பை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பணிப்பெண். செதுக்கிய கோபுரம் போன்ற கச்சிதமான உடலின் மீது செழுத்த வட்ட முகத்தில், அழகாக பூத்திருந்த இதழ்களில் வழுக்கிய உதட்டுச்சாயம், காதுகளின் நுனியில் கொஞ்சிக் குலுங்கிக் கொண்டிருந்த தோடு, கழுத்தில் சன்னமாக விழுந்திருந்த பாண்டோரா, நெற்றியில் சிக்கனமாக இரண்டு புள்ளிகள் மேலொன்றும் கீழொன்றுமாக இட்டு, இடையில் இழுக்கப்பட்ட மெல்லிய பாம்பென, பொட்டு, மெல்லிய கீற்று போன்ற புருவங்களின் மை, மீன் போன்ற அகண்ட பெரிய விழிகளை பாதுகாக்கும் துடிப்பான நீண்ட இமைகள், கோதுமை நிறமெனினும்  மினுமினுக்கும் தேகம் என கிரிஜா, அந்த பெண்ணை எத்தனை ஆழமாக ஆகிரமித்திருக்கிறாள் என்பதை அந்த பணிப்பெண்ணின் மூன்றாவது பெருமூச்சை கவனித்த யாரும் ஊகித்திருக்கக்கூடும்.



கிரிஜா அந்த பெண்ணின் பெயரைக் கேட்க அந்தப் பெண்ணோ 'அகிலாக்கா.. ' என்றதோடு நில்லாமல், சினேக பாவனையுடன் 'நீங்க அழகா இருக்கீங்கக்கா' என்றாள் நிஜமான வெகுளித்தனத்துடன்.

பெண்களுக்கான ஆடைகள் விற்கும் எல்லா கடைகளிலும், ஒரு பெண் தேர்வு செய்யும் ஆடைகளைக் கொண்டே , அது எதற்கு பயன்படப்போகிறது என்பதை அந்த கடைகளில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும்  விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

இலக்கு ஆணாக இருக்கையில் தான் ஒரு பெண்ணின் அவயங்கள் மீது வண்ண வண்ண ஆடைகள் பாங்குடன் அமர்ந்து வசீகரம் கூட்டுவதன் உச்சம் நிகழ்கிறது. விருப்பமுள்ள ஆணின் கவனத்தை தன் பால் இருத்தி வைக்க விரும்புவதில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட பசியடங்காத சுறாக்கள் போலவே இயங்குகிறார்கள். பெண்களின் ஆடைகள் உலகம், ஆண்களையே மையமாக வைத்து சுழல்வது. பெண்கள் மட்டுமே கொண்ட உலகம் ஒன்று சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் அந்த உலகத்தில் ஆடை என்ற ஒன்ற பெரும்பாலும் தேவைப்படாமலே போயிருக்கும்.  அழகை கூட்டி காட்ட வேண்டுமென்பதை விடவும், குறைகளை மறைத்துக் காட்ட வேண்டும் என்பதுதான் பெண்களின் ஆடைகள் உலகை பெறுக்கமடையச்செய்வது. உலகில் குறைகள் சிறிது கூட இல்லாத பெண்ணாக தன்னைத்தானே பார்க்கும் பெண், இல்லவே இல்லை. எல்லா பெண்ணும் தன்னை ஏதோ ஒரு வகையில் அழகில், குறைபட்டவளாகவே நினைத்துக்கொள்கிறாள். எதிலோ குறை. அதை நிவர்த்தி செய்ய வேண்டும்!!. இது அணிந்தால் நிவர்த்தி ஆகுமா, அது அணிந்தால் நிவர்த்தி ஆகுமா என்று வாழ் நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறாள். எது அணிந்தாலும் அவளுக்கு முழுமையடைவதில்லை. ஏதோவொரு குறை எஞ்சியிருக்கிறது.

கடை காவலாளி, கிரிஜா கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்ததையோ. உதவிய பணிப்பெண்ணை இப்போது சக பணிப்பெண்கள் சூழ்ந்து ஏதேதோ கேட்டதையோ , எல்லா அழகுப் பதுமைகளைப்போல கிரிஜாவும் ஒரு ஆளுமையுடன் ஸ்கூட்டியில் ஏறி கடந்து போனாள்.

கிரிஜா ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்த போது, சிந்து மொபைலில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தாள்.

'என்னடீ லேட்டு இன்னிக்கு?' என்றாள் சிந்து, மொபைலிலிருந்து பார்வையை விலக்காமல்.

'ஆங்..கொஞ்சம் ஷாப்பிங் போயிட்டு வந்தேன்டீ' என்றாள் கிரிஜா.

சிந்துவிடமிருந்து தொடர்ந்து பதில் இல்லாமல் போகவே, சிந்து மொபைலில் யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் இயந்திரமாக, வாங்கிவந்த புதிய உடைகளை அலமாறியில் அடுக்கிவைத்தாள். கிரிஜா அலமாறியில் அடுக்கி வைத்த வண்ண வண்ண உள்ளாடைகளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எதையும் கவனியாதது போல் பொய் முகம் காட்டியபடி மொபைலை கிள்ளுவதை தொடர்ந்தாள் சிந்து.

தனது மொபைலுடன் பாத்ரூமிற்குள் நுழைந்த கிரிஜா, கதவை சார்த்தி தாழ் போட்டுவிட்டு அவசரமாக மொபைலை எடுத்து, வாட்ஸாப் ஆன் செய்தாள். அது வினய்யை ஆன்லைன் என்று காட்டியதும் லேசாக கோபம் கலந்த பொறாமை வந்தது.

முழுவதும் நிரம்பி இருந்த வாளித் தண்ணீரை தரையோடு தரையாக சத்தமில்லாமல் கொட்டிக் கவிழ்த்துவிட்டு மீண்டும் குழாயின் அடியில் வைத்துவிட்டு, குழயை திறந்தாள். மெல்ல குழாய் நீரை வாளிக்குள் தேங்கச் செய்தாள். யூரோப்பியன் வகை டாய்லட்டின் வாயை மூடி அதன் மீது அமர்ந்துகொண்டு, வினய்க்கு 'ஹாய்' என்று ஒரு குறுஞ்செய்தி தட்டினாள்.

மொபைல் வாட்ஸாப் ஆன்லைன் காட்டியதே தவிர.பதிலேதும் வராததில் வினய் மீது கோபம் வந்தது.

'இதுக்கு நீ வருத்தப்படுவ' என்று உள்ளுக்குள் கருவியபடியே மீண்டும் 'பிஸியா?' என்று கேட்டு இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் வினய்யிடமிருந்து,

'என் செல்லத்துக்கு நான் எப்பவுமே பிஸி இல்லை' என்று பதில் வந்ததில் கொஞ்சமாய் கோபம் குறைந்தது.

சட்டென குழாயை நிறுத்திவிட்டு, அறைக்குள் என்ன ஓசை கேட்கிறதென அவதானித்தாள். சிந்து மொபைலை சார்ஜரில் சொருகும் ஓசை கேட்டது.  மீண்டும் குழாயை திறந்து சன்னமாக ஒழுகவிட்டாள்.

'உன் பேரென்ன செல்லம்?' மீண்டும் வினய்.

'அதான் சொன்னியே.. செல்லம்ன்னு..அதான்' பதில் தட்டினாள் கிரிஜா.

'செல்லத்திடம் சிக்கி காதல் பள்ளத்தில் விழுந்துவிட்டேன்' மீண்டும் வினய்.

'அடடா.. கொல்றியேப்பா'

'சென்னையில் எங்க?'

'ஒரு மகளிர் விடுதி'

'எங்க இருக்கு?'

'எதுக்கு? பைக் எடுத்துக்கிட்டு வந்து வாசல்ல நிக்கவா?'

கரெக்ட்.ஆனா பைக் இல்ல. காரு'

'வெளங்கும்... சாரி. ஏற்கனவே இங்க ஏகப்பட்ட பேர் கூர்க்கா வேலை பாக்குறாங்க.. நீ வேறயா?'

'ஓ..அப்படியா? இருக்கட்டுமே... நான் அப்ளை பண்றது காதலன் போஸ்டுக்கு தானே'

''ஏன்? அண்ணன் போஸ்டு காலியா இருக்கு. வேணுமா?'

'அண்ணன் போஸ்டுல இருந்துக்கிட்டு, உன் கைய புடிச்சு இழுத்தா நல்லாவா இருக்கும்?

'என்னது?! கைய புடிச்சு இழுப்பியா?'

'ஆமா. ஏன்? புடிச்சு இழுக்கத்தானே கை?'

'அறை கொடுக்கக் கூட கைதான் தம்பி'

'பரவாயில்லை.. அப்படியாச்சும் உன் கை என் மேல படட்டும்?'

'எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்க போல‌?'

ஹிஹிஹி... ரூம்மேட்ஸ் உனக்கு நிறையவா?'

கிரிஜாவுக்கு சிந்துவின் நினைவு வந்தது.

'இல்லை.. ரொம்பலாம் இல்லை.. ஒரே ஒருத்தி தான்..'

'அவ எப்படியிருப்பா?'

'உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை..இன்னும் என்னையே பிக்கப் பண்ணி முடியலை..அதுக்குள்ள ரூம்மேட்டா?'

'சும்மா சொல்லேன்'

'சொல்றேன்..ஆனா அதுகப்புறம் உன்கிட்ட பேசமாட்டேன்.. ஓகே வா?'

'அய்யோ வேணவே வேணாம்'

கிரிஜா சிரித்துக்கொண்டாள்.




அலுவலகத்தில் அமர்ந்து, கொயரிக்களை சரிபார்த்துக்கொண்டிருக்கையில் பக்கத்து சீட் விமலாவிடம் , பின் சீட் ஹரி,

'ஹாய் விமலா? என்ன லேட்டு?' என்று கேட்பது கேட்டது.

'வர்ற வழியில ஆட்டோ ஒண்ணு லேசா இடிச்சிடிச்சுடா' என்றாள் விமலா.

'அய்யய்யோ..ஆட்டோக்கு ஒண்ணும் இல்லையே?' என்றான் ஹரி கவலையுடன்.

குபீரென்று சிரிப்பு வந்து சிந்து சிரிக்க, விமலா ஹரியை முறைத்தாள்.

அப்போது சிந்துவுக்கு மொபைலில.் அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று பார்த்தாள். மொபைல் திரையில் பளிச்சிட்டான் முரளி.

கணிணியை லாக் செய்துவிட்டு, மொபைலை எடுத்து செவியில் பொறுத்திக்கொண்டே இருக்கையை விட்டெழுந்து வராந்தைக்கு வந்தாள் சிந்து.

'ஹலோ' என்றாள்.

'ஹாய் சிந்து, எப்படி இருக்க?'

'ம்ம்ம்... குட்.. நீ?'

'குட்.. வேலையா இருந்தியா? இப்ப பேசலாமா?'

'ஆமா, கொஞ்சம் வேலையாதான் இருக்கேன்.. இப்ப பேச முடியாது.. சாயந்திரம் பேசுறியா?'

'சரி ஓகே சிந்து.. சாயந்திரம் பண்றேன்...பை' ஃபோன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சிந்து சற்று நேரம் வராந்தையிலேயே நின்றாள். பின் மெதுவாக கேஃபிடீரியா பக்கம் வந்தாள்.

கிரிஜாவும் விமலாவும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் அமர்ந்தாள்.

'என்னடீ சிந்து, அந்த பக் ஃபிக்ஸ் பண்ணிட்டியா? என்றாள் கிரிஜா.

'இல்லைடீ.. செம போர்.. ரிலீஸ்க்கு டைம் இருக்கு.. மெதுவா ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.. இங்க என்ன டாபிக் ஓடுது' என்றாள் சிந்து.

'காலையில ஷேர் ஆட்டோல நம்ம விம்முகிட்ட ஒருத்தன் மிஸ் பிஹேவ் பண்ணிருக்கான்.. விம்மு செம டென்ஷனாகி, செமயா கத்திவிட்டிருக்கா ரோட்லயே. சுத்தி நின்னவன்லாம் நல்லா மொத்தினாங்களாம் அவனை..ஆனா, அது மேட்டர் இல்லை.. நம்ம விம்மு, அவளோட போன வார அட்வென்ச்சர் பத்தி சொல்லிட்டு இருக்கா' என்றாள் கிரிஜா.

'ஓ.. மேட்டரா விமலா?'  என்று சிந்து கேட்க, இல்லையென்பதாய் தலையை இடமும் வலமும் ஆட்டி சிரித்தாள் விமலா.

'பையன் எப்படி?' என்றாள் கிரிஜா.

'வேஸ்டுடீ..'

'டீடெயிலா சொல்லுடீ.. யாரு பையன்? அதுலேர்ந்து சொல்லு' சிந்து வற்புறுத்தினாள்.

'பையன் இல்லை.. அங்கிள்... ' என்றாள் விமலா.

'என்னடீ சொல்ற?'  என்றாள் சிந்து அதிர்ச்சியுடன். இப்போது கிரிஜா சிரித்தாள்.

'ஆமாடீ..அந்தாள் எங்க அபார்ட்மென்ட் செக்ரட்டரி.. போன ஞாயித்துகிழமை மொட்டை மாடில துணி காயப்போட்டுகிட்டு இருக்கேன் ...வந்து வழக்கம் போல வழிஞ்சது.. '

'அப்புறம்?' மேலும் ஆர்வமானாள் கிரிஜா.

'சுடிதாரை கொடியில போட்டுட்டு முனையில கைவச்சி அட்ஜஸ்ட் பண்றேன்.. அது, சுடிதாரை புடிக்கிறா மாதிரி கையை புடிக்கிதுடீ..'

'நீ செருப்பாலயே அடிக்க வேண்டியது தானே' முந்தினாள் சிந்து.

விமலா சிரித்தாள்.

'ஒண்ணும் பண்ணலை.. வச்சிட்டு போகட்டும்ன்னு விட்டுட்டேன்' என்றாள்.

'ஏண்டீ?' என்றார்கள் கிரிஜா, சிந்து இருவரும் கோரஸாக, அதிர்ச்சி கலந்த குரலில்.

'அந்தாளோட‌ பொண்டாட்டி பத்து வருஷம் முன்னாடயே செத்து போயிட்டா.. எங்க அபார்ட்மென்ட் செக்ரட்டரி அந்தாள்தான்.. பாவம் காஞ்சி போயிருக்கான் மனுஷன்.. அதான் தொட்டுக்கட்டும்ன்னு விட்டுட்டேன்'

'என்னது புடிச்சிருக்கா? கிழவனையா? எத்தனை நாளா ஓடுது இது?' என்றாள் கிரிஜா

'இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.. நான் எப்பவும் மாடியில துணி காயப்போடறப்போ வாக்கிங் போகும் அது..அப்போ பாக்கும்.. நான் விடுவேனா? ஒரு வாரத்துக்கு நல்லா ஷோ காமிச்சேன்.. இத்தனைக்கும் நைட்டி தான்டீ போட்ருப்பேன்..அதுக்கே அது ஃப்ளாட் ஆயிடிச்சுன்னா பாத்துக்கோயேன்'

'ஏய்.. ஒரே அபார்ட்மென்ட்ங்குற.. தனியா இருக்குற நேரம் பாத்து ஏதாவது பண்ணிடப்போறான்டீ' என்றாள் சிந்து, நிஜமான கவலையுடன்.

'சேச்சே... கிழவனுக்கு அவ்ளோ தெம்புலாம் இல்லை.. அது இளசா இருந்தப்போ இதெல்லாம் பாத்திருக்காதுல்ல... அதான் சும்மா ஏதோ வயசான காலத்துல என்னமோ ட்ரை பண்ணுது ...போற வரை போகட்டும்.. அபார்ட்மென்ட் செக்ரட்டரி.. சோ வீட்டுல குழாய் ரிபேர், அது இதுன்னா உடனே வேலை நடக்கும் ..இப்போவரை ஒண்ணும் பிரச்சனை இல்லை.. பிரச்சனைன்னு வந்தா பாத்துக்கலாம்.

'ஆள் எப்படி? ரொம்ப வசதியோ?' கேட்டாள் சிந்து.

'கவர்மென்ட்ல ஏதோ வேலை பாத்திச்சாமாம்.. அந்தாள் பையன் கூட நமக்கு பக்கத்து பில்டிங் தான்.. நாம டீ சாப்பிட ரோட்டுக்கு போகும்போது ஒருத்தன் ஃப்ரெஞ்ச் தாடி வச்சிட்டு ஒயரமா சிகப்பா நிப்பானே..அவந்தான்.. பேரு கணேஷ்.. பென்ஷன் வரும்...வீட்டுல கார் இருக்கு.. அதை விடு... சிந்து, அந்த முரளி மேட்டர் என்னாச்சு?' என்றாள் விமலா.

'இப்பக்கூட கால் பண்ணினான்.. சாயந்திரமா பேச சொல்லிருக்கேன்' என்ற சிந்து, மணிக்கட்டை திருப்பி பார்த்துவிட்டு,

'சரிடீ,, ஸ்டேடஸ் அப்டேட் பண்ணனும்.. நான் கிளம்பறேன்' என்றுவிட்டு எழுந்து மாடியூலினுள் நுழைந்து கடந்து காணாமல் போனாள்..

'இவ என்னடீ இவ்ளோ ஸ்லோவா இருக்கா?' என்றாள் விமலா.

'விடுடீ.. உனக்கு கிழவனை புடிக்கலையா? அதுமாதிரி அவ ஒரு லாஜிக் வச்சிருக்கா.. எப்படியோ.. சந்தோஷமா இருந்தா சரிதான்.. அதிருக்கட்டும் ... உன் லவ்வர் அந்த ஜெயந்த் கூட ஏதாவது சண்டையா?'' என்றாள் கிரிஜா.

'உனக்கு எப்படி தெரியும்?

'அவனோட ஃபேஸ்புக்ல ஒரே சோக கீதம் தான்... நேத்துகூட டீஷாப்ல எங்களையே சோகமா பாத்துக்கிட்டு இருந்தான்.. சாயந்திரம் கிளம்பும்போது, ஆபீஸ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருந்தான்.. நான் போனதும், நீ எங்கன்னு கேட்டான்.. நான் பாக்கலைன்னு சொல்லிட்டேன்.. பக்கத்து ஆபீஸ்ல தான்டீ இருக்கான்.. பொய் சொன்னேன்னு தெரிஞ்சிட்டா?'

'விடு.. அவனை நான் பாத்துக்குறேன்... கல்யாணம் ஆகட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு' என்றாள் விமலா.

'ஹ்ம்ம்.. என்னமோ போ... இத்தனை நாளா ஃப்ரண்ட்ஸா இருக்கோம்.. என்னிக்காச்சும் எங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு காபி குடுத்திருக்கியாடீ? நாங்கள்லாம் ஹாஸ்டல்ல தானே இருக்கோம்'

'ஓஹோ கிரி மேடம்க்கு கிழவனை பாக்கணுமாக்கும்?'

'ஆமா ஊர்ல இல்லாத கிழவன்?! அடிபோடீ.. நீ யெல்லாம் லேட்டு.. என் கதையெல்லாம் கேட்டா நீ பேஜாராயிடுவ'

'டீ.. என்னடீ சஸ்பென்ஸ் வைக்கிற... என்னடீ கதை..சொல்லேன்..'

'விடுடீ... அப்புறமா சொல்றேன்..வா.. மாடியூல்லேர்ந்து வந்து ரொம்ப நேரம் ஆச்சு' என்றுவிட்டு கிரிஜா எழ, கூடவே எழுந்தாள் விமலா.





 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)

Sunday, February 22, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 3

உதிராதபூக்கள் - அத்தியாயம் -3




சிந்து தனது படுக்கையில் அமர்ந்து, நகங்களை சீராக்கிக்கொண்டிருக்கையில், மாடியில் துணி காய போட்டுவிட்டு வாளியுடன் நுழைந்தாள் கிரிஜா.

'ஹேய், என்னடீ...இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?' என்றாள் ஆச்சர்யமாக.

சிந்து பதிலேதும் பேசாதது கண்டு சற்றே கலவரமாகி, சிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் கிரிஜா.

'என்னடீ ஆச்சு... மேட்டர் முடிச்சிட்டானா?' என்றாள்.

சிந்து கிரிஜாவை கண்களில் பார்த்துவிட்டு, நடந்ததை முழுவதும் விவரித்தாள்.

'நினைச்சேன் சிந்து.. இந்த ஓவர் படிப்ஸெல்லாம் இப்படித்தான் இருக்கும்... நான் அப்பவே சொன்னேன்.. நீ தான் கேக்கலை.. அவன் ரொம்ப ஓவராத்தான் பண்ணியிருக்கான். மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு. நிறைய பொண்ணுங்க வந்து பேசுதுல?..அந்த திமிறு.. இவனையெல்லாம் நீ திரும்பியே பாத்திருக்கக் கூடாது.' என்றாள் கிரிஜா கோபமாக.

சிந்து எதுவும் பேசாமல் அமைதியாக தனது நகங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

'சரி சிந்து.. உன் இஷ்டம்..அப்போ வினய் உனக்கு வேணாம்ல?' என்றாள்.

நகங்களை பார்த்துக்கொண்டிருந்த சிந்து சட்டென திரும்பி,  கிரிஜாவை ஒரு கணம் ஆர்வமுடன் பார்த்தாள்.

'ஏன் கிரி? நீ ட்ரை பண்ண போறியா?' என்றாள்.

'ஏன் கூடாது?.. நீதான் முரளின்னு செட் ஆயிட்டல?'

'செட் ஆயிட்டேன்னு யாரு சொன்னா? முரளிக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன். அதை முரளி சரியா பயன்படுத்திக்கலை'

'அதுனால?'

'அதுனால, அடுத்த வாய்ப்பை வினய்க்கு தரலாம்ன்னு பாக்குறேன். அதுல அவன் தேறுகிறானா பார்க்கணும்' என்றாள் சிந்து.

கேட்டுக்கொண்டிருந்த கிரிஜா வெறுமனே 'ம்ம்ம்ம்ம்' என்றாள்.

'சரி கிரி.. நானும் போய் என் துணிகளை துவைச்சு காயப்போட்டுட்டு வந்துடறேன்.. மெஷின் இப்போ ஃப்ரீயா தானே இருக்கு?'

'ஆமா சிந்து.. சீக்கிரம் போ.. வேற யாரும் வர்றதுக்குல்ல?'

சிந்து எழுந்து பாத்ரூம் செல்ல, கிரிஜாவின் பார்வை, படுக்கையின் மீதிருந்த சிந்துவின் மொபைல் மீது அர்த்தமாக விழுந்தது.

வினய் முக நூலில் இருந்தபோது, லேசான அதிர்வுடன் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

'ஹாய்'

எண் புதியதாக இருக்கவே, யாராக இருக்குமென்று ஒரு நொடி ஊகித்து, யார் பெயரும் குறிப்பிட்டு தோன்றாமல்,

'ஹலோ, இது என்னுடைய புதிய மொபைல். இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. பழைய போனிலிருந்து தொடர்புகளை இன்னும் மாற்றவில்லை. நீங்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?' என்று மிக மிக நாகரீகமாக ஆங்கிலத்தில் பதில் அனுப்பினான்.

உடனேயே பதில் வந்தது.

'என் கம்மல் காணோம். நீங்க எடுத்தீங்களா?'

வினய் சட்டென பிரகாசமானான். எதையோ டைப் செய்து, சற்று யோசித்து, பின் அதை அழித்துவிட்டு,

'ஆமா, என்கிட்ட தான் இருக்கு..' என்று பதில் அனுப்பினான்.

'ஏன் எடுத்தீங்க?'  மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.

'உங்களைப் போலவே அழகா இருந்தது. ஒரு உரையில ரெண்டு கத்தி வேணாம்னு எடுத்துட்டேன்'

அந்தப் பக்கமிருந்து ஒரு புன்னகை வந்து விழுந்தது. தொடர்ந்து,

'நாங்க ட்வின்ஸ்.. அப்படித்தான் இருப்போம்' என்றது.

'நாங்க திருடங்க.. நாங்களும் அப்படித்தான் இருப்போம்'  என்றான் இவன்.

ஒரு புன்னகை கண்ணடித்தது. தொடர்ந்து,

'என் கம்மலை திருப்பிக் குடுங்க'

'நான் உங்க கம்மலை உங்ககிட்ட குடுத்துட்டா. உங்க கம்மல் உங்களை என் கிட்ட குடுத்துடுமா?'

'சோ ஸ்வீட்'

'ஸ்வீட் வேணாம்.. நீங்க மட்டும் தான்'

'முதல்ல கம்மலை திருப்பி குடுங்க...அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?'

'அதே தான் நானும் கேக்குறேன்.. அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?'

'நான் எதை வச்சிருக்கேன்?'

'என் இதயத்தை'

'என்கிட்ட அப்படி எதுவும் இல்லை'

'ஓஹோ.. ஏகப்பட்டது வச்சிருகீங்களா.. அப்போ என்னோடது எங்கயாவது ஓரமா இருக்கும்.. கம்மல் தரும்போது நானே தேடி எடுத்துக்குறேன்'

'எப்ப தரீங்க?'

'நீங்க எப்ப சொல்றீங்களோ, அப்போ?'

'சொல்றேன்' என்று மட்டும் வந்தது இறுதியாக.

வினய் அந்த எண்ணை தனது மொபையில் Love11 என்று பதிவு செய்தான்.


 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)

Sunday, February 15, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 2

உதிராதபூக்கள் - அத்தியாயம் 2



முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது.

'இப்போ என்ன ப்ளான்?' என்றாள் சிந்து.

'வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்' என்றான் முரளி.

இருவரும் கடலை பார்த்த திக்கில், அமர்ந்தார்கள். கடலின் அலைகள் அவர்களை விழுங்குவது போல் பொங்கி வருவதும், பின்வாங்குவதுமாக இருந்தது. உச்சத்து சூரியனின் உக்கிரத்தில் கடல் அலைகள், வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னின.

இருவரும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார்கள்.

'நேத்து ஃபேஸ்புக்ல போட்டிருந்தியே உன் ஃபோட்டோ...அது செம சூப்பர் சிந்து.. செம்ம அழகா இருந்த நீ' என்றான் முரளி.

'நானா! ஃபோட்டோவா! இல்லையே..  நீ வேற யாரோடதோ பாத்துட்டு சொல்றன்னு நினைக்கிறேன் முரளி'

'ச்சே.. நீயே தான்.. என்ன சிந்து..டெய்லி உன்னை சைட் அடிக்கிறேன்..எனக்கு தெரியாதா?'

'டேய்.. ஃபோட்டோ போடலைடா.. ஒரு ரோஜாப்பூ தான் போட்........' என்று இழுத்த சிந்து கொஞ்சமாய் கண்களை சுருக்கிவிட்டு,

'டாய்... கேடிப்பயலே' என்று முரளியை அடிக்கப் பாய்ந்தாள்.

முரளி சிரித்தான்.

'என் ரூம்க்கு போறவழியில ஒரு வீட்டுல பூத்திருந்தது அந்த ரோஜா.. நல்லா இருந்திச்சுன்னு ஃபோட்டோ எடுத்து போட்டேன்'

'நீ செல்லும் வழியில் பூக்கும் பூக்கள் கூட உன் சாயலில்'

'அடடா!! கவிதை கவிதை..'

'அட விடும்மா, அது க்ளிஷே ஆகிப்போச்சு' என்று முரளி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, சர்வர் சிக்கன் பிரியாணியும், வஞ்சிரமீனும் கொண்டு வந்து வைத்து பரிமாறினார்.

'முரளி, இதை எங்க சுட்ட?'

'இதுன்னு இல்லை. எல்லா சிக்கனையும் அடுப்புலதான் சுடுவாங்க‌.. '

'ஹைய ஜோக்கு!..  கவிதை மாதிரி ஏதோ சொன்னியே அதை எங்க சுட்டன்னு கேட்டேன்'

'ஓ...அதுவா, ஒரு ப்ளாக்ல'

'அதானே பாத்தேன்'

'ஏன்?'

'சொந்தமாத்தான் எழுதிட்டியோன்னு'

'அட!.. சொந்தமா எழுதினாதானா? '

'ஆமா! கவிதைன்னா சும்மாவா? எல்லாருக்கும் எழுத வந்துடுதா என்ன? அதெல்லாம் தனி ஸ்கில்.. அவ்ளோ லேசுல எல்லாருக்கும்லாம் வந்துடாது முரளி'

'அட சும்மாயிரு.. சிந்து.. கவிதையே பொய்தான்...'

'ஓஹோ.. அப்போ நீ சொன்னது பொய்யா?'

'இல்லையா பின்ன? நீ செல்லும் வழியில் மட்டுமல்ல... பூமியில் பூக்கும் அத்தனை பூக்களிலும் கூட உன் சாயல்தான்'

'கொல்றியே.. என்னை இங்கயே கவுத்துடுவ போல?'

சிந்துஜா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, கினிகினியென்று செல்போன் மணி அடிக்க, முரளி எடுத்து ஹலோ என்றான். அந்தப் புறத்தில் பெண்ணின் குரல் கேட்டதும் சிந்துவுக்கு சுருக்கென்றது.

தொடர்ந்து முரளி பேசிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்து தள்ளிச்சென்றான். சிந்து சிக்கனை ருசித்துக்கொண்டே முரளியை அவதானிக்கத்துவங்கினாள்.

சிக்கனும், மீனும் ஸ்வாஹா ஆகும் வரை முரளி கடற்கரை மணலில் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, கடலை பார்த்தபடி பேசிக்கொண்டே இருந்துவிட்டு திரும்பி வந்து உட்கார்ந்தான்.

'சாரி' என்றான்.

'எடுத்து குடுத்தா போட்டுக்குவேன்' என்றாள் சிந்து உதட்டுச்சுழிப்புடன்.

'ஹேய்... ' என்றுவிட்டு பிரியாணியில் கைவைக்க முரளியின் மொபைலில் ஒரு  குறுஞ்செய்தி வந்து விழுந்தது. முரளி ஒரு கையால் சாப்பிட்டுகொண்டே இடது கையால் மொபைலை துழாவினான். சிந்து முரளியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அப்புறம் சொல்லு சிந்து... எப்போ உனக்கு ப்ராஜெக்ட்ல ரிலீஸ் சொல்லியிருக்காங்க'

'எங்கடா சொல்றான் அந்த மேனேஜரு.. நல்லா வழியிறான்.. வேற ஒண்ணும் பண்ண மாட்டேங்குறான். நானும் எத்தனை தடவை தான் கேக்குறது... போன தடவை ஒன் டு ஒன்ல சொல்லிட்டேன்.. கத்துக்க வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டாச்சு.. இனிமே கத்துக்க ஒண்ணும் இல்லை.. ஸ்ப்ரிங் கத்துக்குறது எனக்கு க்ரோத்.. ஒரு மாசம் தான்..அதுக்குமேல என்கிட்ட ப்ராடக்ட்டிவிட்டு எதிர்பார்க்காதீங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. ஒரே மாசம் தான் நீ வேணா பாரேன்'

மொபைலை நோண்டியபடியே, இருந்த முரளி சொன்ன 'ம்ம்... ம்ம்' அபஸ்வரமாக வந்து விழுந்ததை குறித்துக்கொண்டபடியே துப்பட்டாவின் முனையில் முடிச்சு போட்டு அவிழ்த்துக்கொண்டிருந்தாள் சிந்து.

முரளி,

'ஹ்ம்ம்... விடு.. இந்த கம்பெனியே இப்படித்தான்.. எப்படியோ ப்ராஜெக்ட்ல உனக்கு ப்ரமோஷன் தந்தா சரிதான்'  என்றபோது, சட்டென சிந்துவின் துப்பட்டா முடிச்சு, சரியாக மூன்று நொடிகளுக்கு நின்று பின் தொடர்ந்தது.

'ஆமாமா, ப்ராஜெக்டல கிடைச்சாலே போதும்தான்' என்றாள் சிந்து, இமைக்காமல் முரளியைப் பார்த்தபடியே.

மொபைலில் இருந்து தலையை தூக்கி முரளி இப்போது சிந்துவைப் பார்த்து சினேகமாய் சிரிக்க, பதிலுக்கு சிந்து சிரித்ததில் இருந்த வெறுமை சட்டென உறுத்தியது முரளிக்கு.

தட்டுகள் காலியாகிவிட, எழுந்து கைகழுவிவிட்டு, பில் செட்டில் செய்து விட்டு, கடற்கரை மணலை நோக்கி முரளி நடக்க எத்தனிக்க, சிந்து ,

'முரளி, நான் கெளம்பறேன்' என்றாள்.

'கெளம்புறியா.. என்ன சிந்து இப்போதானே சாப்டோம்.. கொஞ்ச நேரம் பேசலாமே' என்றான் முரளி.

'பேசின வரை போதும் முரளி. எனக்கு போகணும்' என்றாள் சிந்து கராறாக.

'என்ன சிந்து இப்படி பேசுற.. என்னாச்சு.. பேசணும்னு தானே வந்தோம்?'

'ஆமாமா, ஆனா நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலையே' என்று சிந்து வெடுக்கென்று சொன்ன‌போது முரளி சற்று திடுக்கிட்டுத்தான் போனான்.

'எ... என்ன சொல்ற சிந்து.. எப்போ?' நாக்கு குழறியது முரளிக்கு.

'ஓஹோ ..எப்போன்னு கூட தெரியலை.. தப்பு என்னோடதுதான் முரளி.. நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை.. ஒரு நாளைக்கு பத்து பேர் என் பின்னாடி சுத்துறானுங்க.. ஆனா எனக்கு உன் உழைப்பு புடிச்சிருந்தது..  நீ பேசுற அடாமிக் பிஸிக்ஸ் பிடிச்சிருந்தது.. அதை புரிஞ்சிக்க நீ எவ்ளோ  படிச்சிருக்கணும்? எத்தனை புக்ஸ ரெஃபர் பண்ணியிருக்கனும்..  இன்னிக்கு கிடைக்கிற நேரத்தை என் பின்னாடி சுத்துற பசங்க, இதே மாதிரி வேற பொண்ணு பின்னாடியும் சுத்தியிருக்கலாம்ன்னு யோசிக்காத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கிட்ட போனா, உன்னையே தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்வானுங்க. நம்பித்தொலைக்கணும். வேற வழியில்லை.. உன்னை மாதிரி பசங்க பேசுற அடாமிக் பிஸிக்ஸே, உனக்கு கிடைக்கிற நேரத்துல நீ என்ன பண்றன்னு சொல்லுது. கண்ணு முன்னாடி நேரத்தை உபயோகமா அறிவுப்பூர்வமா செலவு பண்ணினதுக்கு கணக்கு காமிச்சிட்டு கூப்ட பாத்தியா, அது புடிச்சிருந்தது. அதுனால நீ கூப்பிட்டதும் விருப்பப்பட்டு வந்தேன்.. ஆனா, உன்னை நம்பி வந்தவ நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை. யாரோடவோ பேசிட்டிருந்துட்டு வர.. ஏன் முரளி? அதிகமா படிச்சிட்ட திமிறா? என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க பின்னாடி வர திமிறா? இல்லை, நீ கேட்டதும் ஓகே சொல்லி வந்துட்டேனேன்னு சீப்பா நினைக்கிறியா? உன் உழைப்பை மதிச்சு வரவங்களை புரிஞ்சிக்கோ முரளி. அதை உதாசீனப்படுத்துறது நல்லா இல்லை' படபடவென்று பேசினாள் சிந்து.

'ஓ காட்.. சிந்து.. அம் சாரி.. உண்மையாவே சாரி... நா...'

'ஒண்ணும் வேணாம் முரளி..  உன்னை மாதிரி பசங்கலாம் இப்படி பண்ணுறதுனாலதானோ என்னமோ பொண்ணுங்க பின்னால சுத்துற பசங்களா பாத்து செட்டில் ஆயிடறாங்க.. பரவாயில்லை முரளி.. உலகத்துல நீ மட்டும் தான் படிச்சிருக்கேன்னு இல்லை.. எத்தனையோ ஆம்பளைங்க இருக்காங்க‌.. எனிவே முரளி, நான் கிளம்பறேன்.. நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம்' என்றுவிட்டு முரளியின் பதிலுக்கு காத்திராமல் நடந்தாள் சிந்து.

பொங்கி வந்து பின் தங்கும் அலைகளுக்கு நடுவே, முரளி தனியனாய் நின்று சிந்துவையே பாத்துக்கொண்டிருந்தான்.


 - இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com

Monday, February 9, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 1

மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து பார்த்தது.

சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸாப்பில் வினய் ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான்.

சிந்துஜா ஃபோனை படுக்கையில் வீழி எறிவதற்கும், குளியல் அறையில் ஷவர் நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஜானி இப்போது மேஜையிலிருந்து, படுக்கைக்கு தாவி, மீண்டும் மொபைலை முகர்ந்து பார்க்கத் துவங்கியது. இரண்டு வினாடி தாமதத்திற்கு பிறகு சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். கூந்தலுடன் டவல் பாம்பெனெ பின்னிக்கிடந்தது. படுக்கையில் ஜானி வாலாட்டியபடி ஆர்வமாக கால்களால் எத்திக்கொண்டிருந்த மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் மொபைலை படுக்கையிலேயே எறிந்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த ஜானி, திடுக்கென துள்ளி படுக்கையை விட்டு அவசரமாக இறங்கி, மேஜையின் கீழே, பூகப்பத்துக்கு நடுங்கி நிறபது போல நின்றுகொண்டு ‘அவ்’ என்றது.

சிந்துஜா கண்ணாடி முன் நின்றாள். டவளைக் களைந்து தலைமுடி துவட்டத்துவங்கினாள்.

‘நீ என்ன சொல்லப்போற சிந்து?’ என்றாள் கிரிஜா.

‘எதுக்குடீ’

‘அந்த பசங்களுக்கு தான்’

‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’

‘நான் என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்.. அந்த முரளி சுமார்தான்..’

‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா சொல்லித்தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது.’

‘ஆமா.. நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன ? தெரியாட்டா என்ன?’

சிந்து மெளனமாக தலைகோதிக்கொண்டிருந்தாள். ஜானி இப்போது பெண்களுக்கிடையில் வந்து வாலாட்டி அண்ணாந்து பார்த்தது.

‘வினய் சூப்பரா இருக்கான்.. செவப்பா அழகா.. உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா? செம ட்ரஸ்ஸிங் சென்ஸ்.. அவனோட முடிய கோதிவிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.. அவன் யமஹாவுல வரும்போது அது பறக்கும் பாரு..ச்சே செம ஸ்டைலுடீ.. நீ அதிர்ஷ்டக்கட்டை தான்.. ‘

சிந்து இதற்கும் ஏதும் சொல்லவில்லை.

‘என்னடீ சிந்து, நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ எதுவும் பேச மாட்டேங்குற?’

‘நான் என்ன சொல்ல? நீ உன் ஒபினியன் சொல்லிட்டு இருக்க. நான் கேட்டுட்டு இருக்கேன்’

‘என் ஓபினியனா? அப்போ உனக்கு இதெல்லாம் தோணலையா?’

சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள். ஜானி இப்போது இல்லக்கில்லாமல் அங்குமிங்கும் உலாத்திவிட்டு, மீண்டும் படுக்கை மீது தாவி ஏறி, தலையணையை முகர்ந்தது.

‘கிரி, நாம பொண்ணுங்க. நாம தான் ஆம்பளைங்களை தேர்ந்தெடுக்கணும். சரியான ஆளுக்கு நாம வாய்ப்பு தரணும். இப்போ நீ சொல்ற மாதிரி, வினய்க்கு வாய்ப்பு குடுத்தா என்னாகும்? எப்படா பொண்ணு கிடைப்பான்னு திரியிற பசங்களுக்கு பைக்கும், ஸ்டைலும் இருந்தா போதும்ங்குற எண்ணம் வந்துடாதா? அப்படி வந்துடுறதுனால தான், அதுமட்டும் போதும்ன்னு சுத்துறானுங்க.. இவனுங்க அத்தனை பேருக்கும் நாளைக்கு கல்யாணம் ஆகும்.. இவனுங்க இப்படி ஸ்டைலு, பைக்குன்னு சுத்தினா, வாழ்க்கை மேல தன்னம்பிக்கை எப்படி வரும்? இவனுங்க தான், தன்னோட தன்னம்பிக்கையின்மையை மறைக்க, பொம்பளையை குத்தம் சொல்வாங்க. அவ‌ சுதந்திரத்தை கெடுப்பாங்க‌. அடக்குமுறை பண்ணுவாங்க ‘

‘அதுக்காக?’

‘கொஞ்சம் யோசிச்சு பாரு. வினய் ஸ்டைலு தான். லுக் தான். ஆனா, முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும் , அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ வச்சு எப்படி வேணாலும் பொழைக்கலாம்.. ட்யூஷன் சென்டர் வைக்கலாம். படிப்பு சொல்லிக்கொடுக்கலாம். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். அவனுக்கு நாளைக்கு கல்யாணம் ஆனா, அவனுக்கு பொண்டாட்டியா வரவ‌ பணத்துக்காக நிச்சயமா கஷ்டப்படமாட்டா..’

‘அப்போ பணம் தான் எல்லாமுமா, சிந்து?’

‘கட் தட் க்ராப்.. சோஷியல் மோடிவேஷன் கிரி. நான் ஒரு உலகம் சொல்றேன் அதை கற்பனை பண்ணு. அந்த உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் முரளி மாதிரி சரியான ஆண்களுக்கு மட்டும் வாய்ப்பு குடுக்கிறாங்க. அப்போ என்னாகும்?’

‘என்னாகும்?’

‘கிரி, நீ ரொம்ப அப்பாவியா இருக்க. சரித்திரத்தை புரட்டிப் பாரு. துவக்கத்துல நாய்ன்னு ஒரு இடம் இல்லவே இல்லை. ஓநாய் இனம் தான் இருந்துச்சு. கொஞ்சம் ஏமாந்தா மனுஷனையே சாப்டுடும். அதை கொஞ்சம் கொஞ்சமா மனுஷன், தான் வேட்டையாடுர மாமிசத்தை தூக்கிப் போட்டு வளர்த்தான். மனுஷன் வீசுற மாமிசத்துக்கு பழகின ஓநாய்கள்ல ஒரு பகுதி, வேட்டை குணம் மறைஞ்சு நாய் இனமா ஆயிடிச்சு. இன்னிக்கு நாம தூக்கிக் கொஞ்சுற ஜானி, அப்படி உருவான ஒண்ணு தான்.’

‘என்ன சொல்ல வர, சிந்து?’

‘நாம பழக்கப்படுத்தணும் கிரி. நமக்கு வேண்டியதுக்கு, ஆம்பளைங்களை நாம பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை? ஜீன்ஸ் போடாத.. இதை செய்யாத..அதை செய்யாதன்னு.. அவனுங்க தெளிவாதான் இருக்காங்க. நாம தான், அவனுக்கு நம்மளை புடிக்கணுமேன்னு நம்மளை நாமே மாத்திக்கிட்டு அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம்.. நாம தெளிவா இருக்கணும். எவ்ளோ தான் நம்ம கிட்ட சீன் போட்டாலும் நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்ன்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப்போறாங்க. நாம வழி மாறி போய்டுவோமோன்னு பயந்துதான் ஒரு பாதுகாப்புணர்வுக்காகத்தான் அவங்க நம்மளை அடக்குறாங்க. நாம வழி மாறி போகமாட்டோம்ன்னு தெரிஞ்சா, அவங்களும் நம்மளை கட்டுப்படுத்த மாட்டாங்கன்னு தோணுது. ட்ரிக்கர் நம்ம கிட்ட தான் இருக்கு கிரி’

கிரிஜா சிந்துஜாவையே பார்த்துக்கொண்டிருக்க, சிந்து தொடர்ந்தாள்.

‘பெண்கள் நாம தான் தேர்ந்தெடுக்கணும் கிரி. நாம உபயோகமான ஆம்பளையை தேர்ந்தெடுத்தாதான், நமக்கு வேண்டாதது, தானாவே பொழைக்க வாய்ப்பில்லாம அழிஞ்சிடும். என்னைக்கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்கு கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுன்னு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அப்படி குடுக்க குடுக்க தான், நம்மகிட்டயே வாழ்ந்துட்டு நம்மளையே பின்னால ஏய்க்கிறானுங்க. அடக்க ட்ரை பண்றானுங்க. ஸ்டைலு, அழகு வேற. தன்னம்பிக்கை, திறமை வேற. யோனியோட சக்தின்னா என்னன்னு காமிக்கணும் கிரி இவனுங்களுக்கு. என்னோட தேர்வு முரளி தான். முரளிக்கு தான் நான் வாயப்பளிக்கப்போறேன்’ என்றாள் சிந்து தெளிவாக.

இப்போது ஜானி, அவரகள் இருவருக்குமிடையே வந்து, சிந்துவின் கால்களின் மேல் தனது முன்னங்கால்களை பரப்பி வைத்து எம்பி, முகத்தருகே வந்து சிந்துவுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்தது.

– இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com